குபேரனிடம் ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு? தேவஸ்தானத்திடம் பக்தர் கேள்வி

தினமலர் செய்தி : 'திருப்பதி ஏழுமலை யான், குபேரனிடம் பெற்ற கடன் எவ்வளவு? அதற்கான வட்டியாக இதுவரை எவ்வளவு தொகை செலுத்தப்பட்டு உள்ளது? இன்னும் எத்தனை ஆண்டுகளில் இந்த கடன் நிறைவடையும்?' என, பெங்களூருவை சேர்ந்த பக்தர் நரசிம்ம மூர்த்தி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், விவரம் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.


காணிக்கை:

நாட்டிலேயே அதிக வருவாய் ஈட்டும் கோவில்களில் ஒன்றான திருப்பதிக்கு, ஆண்டு தோறும் வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும், ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்கள், பணம், நகை, விலை உயர்ந்த பொருட்கள் போன்றவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்து கின்றனர். இந்த உண்டியல் காணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக அதிகரித்து வருகிறது.இதுதவிர, பக்தர்கள் செலுத்தும் முடி காணிக்கை, தேவஸ்தானத்திற்கு சொந்தமான தங்கும் விடுதிகள் மூலமும் தேவஸ்தானத்திற்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது. எனினும், இந்த வருவாய் அனைத்தும், ஏழுமலையான் தன் திருமணத்தின் போது, குபேரனிடம் பெற்ற கடனுக்கான வட்டியாக செலுத்தப்படுவதாக பல ஆண்டுகளாக, பக்தர்களால் நம்பப்படுகிறது.

இதற்கிடையே, கோவிலுக்கு கிடைக்கும் வருவாய் அனைத்தையும், கடனுக்கான வட்டியாக செலுத்துவதாகக் கூறி, தேவஸ்தானம் போர்டு பக்தர்களை ஏமாற்றுவதாக, பெங்களூருவை சேர்ந்த டி.நரசிம்மமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.ஆந்திர மாநில தகவல் ஆணையத்திடம், அவர் அளித்துள்ள ஆர்.டி.ஐ., விண்ணப்பத்தில், 'ஏழுமலையான் பெற்ற கடன் தொகை எவ்வளவு? அதற்கான வட்டியாக இதுவரை எவ்வளவு தொகை செலுத்தப்பட்டுள்ளது? இந்தக் கடன் எப்போது முடியும்?' என, கேள்வி எழுப்பியுள்ளார்.இந்த விண்ணப்பத்தை, ஆந்திர மாநில தகவல் ஆணையம், திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. நரசிம்ம மூர்த்தியின் இந்த கேள்விகளால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

எப்போது முடியும்:

இதுகுறித்து நரசிம்ம மூர்த்தி கூறியாவது:புராணக்கதைகள் மூலம், மக்களை முட்டாளாக்க முயல்கின்றனர். பக்தர்களின் காணிக்கை அனைத்தும் வட்டியாக செலுத்தப்படுவதாக கூறுகின்றனர். அப்படியானால், இந்த கடன் எப்போது முடியும் என்பதை தெரிவிக்க வேண்டும். பக்தர்கள் செலுத்தும் காணிக்கைக்கு, தேவஸ்தான நிர்வாகிகள் தகுந்த கணக்கு தர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

கலியுகம் முடியும் வரை...:

இதுகுறித்து, திருப்பதி தேவஸ்தான வட்டாரங்கள் கூறியதாவது:வைகுண்டத்தில் லட்சுமி தேவியை பிரிந்து பூலோகம் வந்த மகாவிஷ்ணு, வெங்கடேஷ்வரராக அவதரித்தார். இங்கு, ராஜாவின் மகளான பத்மாவதியை மணப்பதற்காக, குபேரனிடம் கடன் பெற்றார்.கலியுகம் முடியும் வரை, தான் பெற்ற கடனுக்கு, வட்டி செலுத்துவதாகவும், வாக்களித்தார். அதன்படியே, பக்தர்களின் காணிக்கை அனைத்தும், ஏழுமலையானின் கடனுக்கான வட்டியாக செலுத்தப்படுவதாக நம்பப்படுகிறது.இவ்வாறு, தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Comments