தேசிய சின்னங்களில் கிரானைட் கொள்ளை: சகாயம் விசாரணையில் 'திடுக்'

தினமலர் செய்தி : மேலூர் : மதுரையில் தேசிய புராதன சின்னங்களை 'தீர்வையற்ற தரிசு' 'பயனற்ற குளம்' என போலி ஆவணம் தயாரித்து கிரானைட் கொள்ளைக்கு அரசு அதிகாரிகள் சிலர் துணை போனது ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் நேற்று நடத்திய விசாரணையில் அம்பலமானது.

மதுரையில் கிரானைட் கொள்ளை குறித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை அரிட்டாபட்டியில் கலிங்கமலை, கழுகுமலை, ஆப்டாம்மலை, தேங்கூர்மலை, ராமாயிமலை என ஏழு மலைகள் உள்ளன. இங்கு கி.மு., இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுக்கள் உள்ளன. இம்மலைகளில் சமணர்கள் வாழ்ந்தனர். இவை தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் தேசிய புராதன சின்னங்களாக பாதுகாக்கப்படுகின்றன.

சின்னம் அழிப்பு:

அரிட்டாபட்டி மலையின் சமுத்திரம் நீர்த்தேக்கம் 363 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு கிரானைட் கற்கள் வெட்டி எடுக்க வருவாய் துறையினர், 'டாமின்' (தமிழ்நாடு கனிம நிறுவனம்) நிறுவனத்துக்கு 2010 ஜூன் 30ல் குத்தகைக்கு விட்டனர். தனியார் நிறுவனத்தினர் எண்ணற்றோருக்கு, டாமின் துணை ஒப்பந்தம் செய்தது. அரிட்டாபட்டி சமணர் பள்ளியை குடைந்து இரண்டு மாதங்களில் ரூ.பல கோடி மதிப்புள்ள கிரானைட் கற்களை வெட்டினர். இது கிராம மக்களுக்கு தாமதமாகவே தெரிந்தது. கொதிப்படைந்த மக்கள் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்து கிரானைட் வெட்ட இடைக்கால தடை பெற்றனர்.

சகாயம் வேதனை:

அரிட்டாபட்டி மலையில் சமுத்திரகுளம் தடுப்பணை பிரிட்டிஷ் ஆட்சியில் கட்டப்பட்டது. இதன் மூலம் 30 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது. குடிநீர் ஆதாரமாகவும் இருந்தது. கிரானைட் குவாரியால் இவை அழிந்தன. அங்குள்ள சிவன் குடவறை கோயில், தர்மம் குளம், கீழவளவு பஞ்சபாண்டவர் மலை ஆகியவற்றை சகாயம் நேற்று ஆய்வு செய்தார். தேசிய புராதன சின்னங்களை சுற்றி 300 மீ., தொலைவிற்கு ஆக்கிரமிப்புகள் இருக்கக்கூடாது. ஆனால் 100 மீ.,க்கும் உட்பட்டு கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதை கண்டு சகாயம் வேதனை அடைந்தார்.புராதன சின்னங்கள் அமைந்துள்ள மலைகளை 'தீர்வையற்ற தரிசு' 'பயனற்ற குளம்' என வருவாய் துறையினர் போலி ஆவணம் தயாரித்து கிரானைட் கொள்ளைக்கு துணை போனது சகாயம் விசாரணையில் அம்பலமானது. அதிகாரிகளிடம் சகாயம் பேசும்போது, ''புராதன சின்னங்கள் கண் முன்னே அழிந்து வருவது குறித்து தொல்லியல் துறையினர் தடுக்காதது ஏன்? கீழவளவில் மட்டும் 42 கண்மாய்களை கிரானைட் கழிவுகளை கொட்டி மூடியுள்ளனர். இவ்வளவு நடந்தும் பொதுப்பணித்துறையினர் தடுக்கவில்லை.பென்னிகுவிக் என்ற மகான் போட்ட பிச்சையால் இன்று நாம் தண்ணீர் குடிக்கிறோம். அவர் பெரியாறு அணையை கட்டும்போது ஆங்கிலேயர் 300 பேர் பலியானார்கள். தனது சொத்துக்கள் முழுவதையும் விற்றுத்தான் அணை கட்டினார். அப்பேர்பட்ட புனிதன் கட்டிய அணை நீர் கடைமடை பகுதியான மேலூருக்கு வர முடியாமல் தடுத்துள்ளனர். தேசிய சின்னங்களை பிரிட்டிஷ் அரசு கூட காப்பாற்றியது. ஆனால் நம் உணர்வுகள். வரலாற்று பொக்கிஷங்களை நாம்
காப்பாற்றத் தவறியது வேதனையளிக்கிறது,'' என்றார்.

சென்னையில் சகாயம்:

சென்னை அறிவியல் நகர துணை தலைவரான சகாயம் கூடுதல் பொறுப்பாக கிரானைட் கொள்ளை குறித்து விசாரிக்கிறார். மதுரையில் இரண்டாவது நாளாக குவாரிகளை ஆய்வு செய்த சகாயம் நேற்றிரவு சென்னை புறப்பட்டு சென்றார். அங்கு அறிவியல் நகர பணிகளை ஒரு வாரம் மேற்கொள்வார். பின் மதுரையில் மீண்டும் விசாரணையை துவக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments