உயர்கிறது ரயில் கட்டணம்: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும்

தினமலர் செய்தி : புதுடில்லி : ரயில்வே துறை, கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஊழியர்களின் சம்பளத்திற்கும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் ஏராளமான நிதி தேவைப்படுகிறது. மேலும், ரயில்களை இயக்குவதற்கான டீசல் போன்ற எரிபொருள் கட்டணமும், சமீபகாலமாக கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், எரிபொருள் விலை உயர்வுக்கேற்ப, ரயில் கட்டணத்தை, ஆண்டுக்கு இரண்டு முறை மாற்றியமைப்பதென, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துஉள்ளது.


கடந்த ஜூனில், எரிபொருள் விலை, 4.2 சதவீதம் உயர்ந்தது. இதையடுத்து, ரயில் கட்டணம், அதிகரிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக எரிபொருள் விலை, மேலும், 4 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால், அதற்கேற்ப பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணத்தை உயர்த்த, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.நிர்வாக திறமை உடையவர் என, புகழப்படும் சுரேஷ் பிரபு, ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், ரயில் கட்டண உயர்வுடன் மேலும் சில அதிரடி நடவடிக்கைகளையும் செயல்படுத்தி, நிதி நிலையை சீராக்க முடிவு செய்துள்ளார்.


ரயில் கட்டண :

உயர்வு நிச்சயம் என்பதை, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, மறைமுகமாக உறுதி செய்துள்ளார். சமீபத்தில், அவர் இதுகுறித்து கூறுகையில், 'ரயில்வே துறைக்கு ஏற்பட்டுள்ள சுமையை மக்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும்' என்றார்.

எனவே, வரும் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள ரயில்வே பட்ஜெட்டின் போது, கட்டண உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Comments