எதிர்கட்சியினர் வெளிநடப்பு

தினமலர் செய்தி : சென்னை: தமிழக சட்டசபையில் , காவிரி குறுக்கே தடுப்பணை, ஆவின் முறைகேடு, கிரானைட் மோசடி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் சட்டசபை நடக்கும் நாட்கள் போதாது, கூட்டம் நடக்கும் நாளை அதிகரிக்க வேண்டும் என்றும் , தி.மு.க., , தே.மு.தி.க., காங்கிரஸ், இடது சாரிகள், புதிய தமிழகம், உள்ளிட்ட எதிர்கட்சியினர் குரல் எழுப்பினர். இதற்கு அனுமதி கொடுக்க சபாநாயகர் மறுத்ததால் அவையில் இருந்து எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் சபைக்கு வரவில்லை. சட்ட சபையில் எனது உடல்நிலை , வயதையும் கருதாமல் எனக்கு உரிய இடம் , நாற்காலி போடாமல் இருந்த காரணத்தினால் நான் அவையில் பங்கேற்க வில்லை, ரத, கஜ, துரக, பதாதிகள் எதிர்பார்க்கவில்லை இடம் கொடுத்தால் போதும் என்று தான் எண்ணி நான் இன்று சபைக்கு வந்தேன் என்று சட்டசபை க்கு வெளியே தி.மு.க., தலைவர் கருணாநிதி பேட்டி அளித்தார்.


தமிழக சட்டசப கூட்டம் இன்று காலை துவங்கியது. 3 நாட்கள் மட்டுமே நடக்கும் இந்த கூட்டத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். இவருக்கு தி.மு.க., பொருளாளர் மு.க., ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். முதல்வர் பன்னீர்செல்வம் முதல்வருக்கான இருக்கையில் அமரவில்லை. தான் நிதி அமைச்சராக இருந்த போது அவருக்கென எந்த இடம் ஒதுக்கப்படிருந்ததோ அதே இருக்கையில் அமர்ந்தார். முதல் நிகழ்ச்சியாக மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கும், மறைந்த பொள்ளாச்சி மகாலிங்கம், எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இடம் கிடைத்தால் போதும் என தான் வந்தேன் : தி.மு.க., தலைவர் கருணாநிதி இன்று சபைக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் அவர் அவைக்கு வந்தார் . அவை பதிவேட்டில் கையெழுத்திட்டதும் கிளம்பினார். சபைக்கு வெளியே, கருணாநிதி நிருபர்களிடம் பேசுகையில், ரத, கஜ, துரக, பதாதிகள் வரவேண்டுமென எதிர்பார்க்கவில்லை. இடம் கிடைத்தால் போதும் என தான் அவைக்கு வந்தேன். ஆனால் எனக்கென இடமும் ஒதுக்கப்படவில்லை. தேவையான நாற்காலியும் போடப்படவில்லை. இதில் இருந்தே நான் அவைக்கு வருவதற்கு அவர்கள் விரும்பவில்லை என்பதை அறிந்து கொண்டேன். இதனால் நான் அவை நடவடிக்கையில் பங்கேற்கவில்லை.

''நான் அறிக்கை வாயிலாக முதல்வரிடம் சட்டப் பேரவை கூட்டத்தில் பங்கேற்க எனக்கென்று தனி நாற்காலி வசதி செய்து தரும்படியும், என்னைப் போன்ற உடல்நலம் இல்லாதவர்கள் அமரும் வகையில் அந்த நாற்காலி இருக்க வேண்டும் என்றும் கேட்டு இருந்தேன். ஆனால், அவ்வாறு பேரவையில் செய்யப்படவில்லை. எனது வயதை கருத்தில் கொண்டு கூட தனி இருக்கை செய்து தரப்படவில்லை. இதனால் எனது சட்டமன்ற கடமைகளை ஆற்ற முடியவில்லை" என்றார்.

குண்டும் , குழியுமாக சாலைகள் ஸ்டாலின் : அவையில் வெளிநடப்பு செய்து வெளியே வந்த தி.மு.க., பொருளாளர் மு.க., ஸ்டாலின் நிருபர்களிடம் பேசுகையில் ; தமிழகத்தில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கின்றன. இதனால் அவை நடக்கும் நாட்களை கூட்ட வேண்டும் என்று கேட்டோம். இதற்கு கூட பேச அனுமதி மறுக்கப்பட்டது. காவிரி பிரச்னையை மையமாக வைத்து தஞ்சாவூரில் இன்று போராட்டம் நடக்கிறது. இது குறித்தும் முல்லை பெரியாறு, பாம்பாற்று பிரச்னை விவாதிக்க வேண்டும். தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகள் பலி, சத்துணவு முட்டை கொள்முதலில் ஊழல், டெங்கு, பறவை காய்ச்சல் பரவுகிறது போதிய நடவடிக்கை இல்லை. மழை காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சாலைகள் குண்டும் , குழியுமாக, புழுதி கிளம்புகிறது. இதனால் மக்கள் பலரும் பாதிக்கப்படுகின்றனர். இதனை விரைந்து சீரமைக்கும் பணியில் இறங்க வேண்டும். தொழில் துறையில் தமிழகம் பின்னுக்கு சென்றுள்ளது , கிரானைட் முறைகேடு, உரத்தட்டுப்பாடு, கொலை கொள்ளை கற்பழிப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை இவ்வாறு பல்வேறு பிரச்னைகள்குறித்து பேசவும், விவாதிக்கவும் வேண்டும் என சபையில் வலியுறுத்தினோம். ஆனால் இது பற்றி பேச அனுமதி மறுக்கப்பட்டது. கேள்வி கேட்கும் போது மக்கள் முதல்வர் அம்மையார் அறிவுரைப்படி என்று அமைச்சர் பதில் சொல்கிறார். இது போன்ற அவலங்களை எல்லாம் எடுத்துரைக்க எங்களுக்கு அனுமதி தராததால் நாங்கள் அவையில் இருந்து வெளி நடப்பு செய்கிறோம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

கருணாநிதியின் பேச்சு முழுவிவரம்: "இன்று தொடங்குகின்ற சட்டப் பேரவையில் பங்கு பெறுவதற்காகவும், செய்தியாளர்களைச் சந்திப்பதற்காகவும் இங்கே வந்தேன். வரும்போதே இன்றுள்ள சூழ்நிலைகள் குறித்து உங்களிடம் கூறுவதற்காக ஓர் அறிக்கையையும் தயாரித்து வந்திருக்கிறேன். அந்த அறிக்கை தற்போது உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இன்றைய முதலமைச்சர் மாண்புமிகு பன்னீர்செல்வம் அவர்கள் ஓர் அறிக்கை விடுத்திருந்தார். அந்த அறிக்கையை நம்பி நான் இன்றைக்கு வந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்தவாறு, என்னைப் போன்ற உடல் நலம் இல்லாதவர்களுக்கு; ஊனமுற்றவர்களுக்குச் செய்து தருகின்ற வசதிகளைக் கூட, எதையும் செய்து தரவில்லை.

டெல்லி போன்ற இடங்களில் மாநிலங்களவையிலே கூட, உடல் நலம் இல்லாதவர்களுக்கு தனி இருக்கையே ஏற்பாடு செய்து தந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட இருக்கையிலே உடல் நலம் இல்லாதவர்கள் கலந்து கொண்ட காட்சிகளை நான் நேரிலேயே கண்டவன். அதைப் போன்ற ஏற்பாடுகள், வசதிகள் செய்து தரப்பட்டிருக்கும் என்று நம்பித்தான் இங்கே வந்தேன். ஆனால் எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. மாறாக நான் வெளியே போனால் போதும் என்ற நிலையில் அவர்கள் நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது வேதனைப்படுகிறேன்.

ஐம்பது ஆண்டு காலம் உரை : சுமார் ஐம்பது ஆண்டு காலம் சட்டப் பேரவையிலே விவாதங்களில் கலந்து கொண்டு உரையாற்றியவன் நான். அதுவும் 50 ஆண்டு காலத்தில் தொடர்ந்து தேர்தலில் பங்கேற்று ஒரு முறை கூட தோல்வி ஏற்படாமல், தொய்வில்லாத நிலையில் அவையில் பங்கேற்றிருக்கிறேன். சட்டப் பேரவைக் கடமைகளை நான் ஆற்றியிருக்கிறேன். ஆனால் இன்றைக்கு நான் அந்தக் கடமைகளை நிறைவேற்ற முடியாமல், குறிப்பாக என்னுடைய நீண்ட கால நண்பரும், இன்றைய முதல் அமைச்சருமான பன்னீர்செல்வம் அவர்கள் பகிரங்கமாக என்னை அழைத்த காரணத்தால், அவர் அழைப்பு விடுத்ததை நம்பி நான்இங்கே வந்தேன். வந்த இடத்தில் எந்த அளவுக்கு மரியாதை தரப்பட்டுள்ளது என்பதை நீங்களே பார்க்கிறீர்கள்.

என்னை வரவேற்பதற்கு ரத, கஜ, துரக, பதாதிகள் எல்லாம் வரவேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் அமர்ந்து பேச இடம் கொடுத்தால் போதும் என்ற நிலையிலே தான் வந்தேன். அவைக்குள் செல்லவே முடியாத நிலை தான் உள்ளது. எனக்கு என்று குறைந்த பட்சம் தனியாக ஒரு நாற்காலியை ஏற்பாடு செய்திருப்பார்கள் என்று நம்பித் தான் வந்தேன்.

அப்படி எதுவும் போடப்படவில்லை. எனவே நான் அவையிலே கலந்து கொள்வதை அவர்கள் விரும்பவில்லை என்பதைத் தற்போது புரிந்து கொண்டேன் என்பதை உங்களிடம் கூறி, என்னுடைய ஆதங்கத்தையும் தெரிவித்து வீட்டுக்குத் திரும்புகிறேன்.தமிழகம் எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பற்றி உங்களுக்கு என்னுடைய அறிக்கை தரப்பட்டிருக்கிறது. அதை நீங்கள் படித்தாலே போதுமானது. இதைத் தவிர வேறு எதுவும் நான் சொல்ல விரும்பவில்லை. ஏன் வந்தேன்? ஏன் திரும்புகிறேன் என்று கேட்டால், வந்தேன், திரும்புகிறேன், திரும்புவதற்குக் காரணம் எனக்கு உள்ளே அமர்ந்து பணியாற்ற எந்த வசதியும் -

நான் பல முறை கேட்டுக் கொண்டும் கூட, பத்திரிகைகள் வாயிலாக தெரிவித்தும் கூட, வாருங்கள் என்று முதலமைச்சர் பன்னீர்செல்வம் வெளிப்படையாக அழைத்தும் கூட, அதை நம்பி இங்கே வந்தால் எந்த ஏற்பாடோ, வசதியோ செய்து தரப்படவில்லை. எனவே அந்த ஏற்பாடுகள் எல்லாம் செய்து தரப்படுகின்ற நேரத்தில் இங்கே வரலாம் என்ற ஆதங்கத்தோடு உங்களிடமிருந்து இப்போது விடைபெற்றுக் கொள்கிறேன்.”

Comments