கிரானைட் முறைகேடு: இன்று2ம் கட்ட விசாரணை துவக்கம்

தினமலர் செய்தி : மதுரை : மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடுகள் குறித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் இன்று (டிச.,15) இரண்டாம் கட்ட விசாரணையை துவக்குகிறார்.
சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி கிரானைட் முறைகேடு குறித்து மதுரையில் சில நாட்களுக்கு முன் அவர் முதற்கட்ட விசாரணை நடத்தினார். அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து வருவாய், கால்நடை, விவசாயம், கனிமவளம் ஆகிய துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். மக்களிடமும் 79 மனுக்கள் பெற்றார்.


இந்நிலையில் இன்றும், நாளையும் இரண்டாம் கட்ட விசாரணையை துவக்குகிறார். சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் அவரிடம் விளக்கம் அளிக்க வாய்ப்புள்ளது. மேலும் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மக்களிடம் மனுக்கள் பெறுகிறார். குவாரிகளிலும் ஆய்வு செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சகாயத்திற்கு வேறு அறை: முதற்கட்ட விசாரணையில் ஈடுபட்ட சகாயத்திற்கு மதுரை சர்க்யூட் ஹவுசில் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் ஒட்டுகேட்பு கருவி பொருத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து வி.ஐ.பிக்கள் தங்கும் அறை ஒதுக்கப்பட்டது. அங்கு அமைச்சர் செல்லுார் ராஜூ தங்க போவதாக கூறி காலி செய்யுமாறு சகாயத்திற்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. இந்த சூழலில் இன்று மதுரை வரும் சகாயத்திற்கு தல்லாகுளம் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் உள்ள ஆய்வு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவருடன் வரும் ஆய்வுக்குழுவைச் சேர்ந்த இருவருக்கு சர்க்யூட் ஹவுஸ் அறை எண் 2,3 ஒதுக்கப்பட்டுள்ளது.

Comments