நாடு பாதுகாப்பற்று இருக்க விடமாட்டேன்: அமைச்சர் பொறுப்பேற்ற பரிகர் சூளுரை

தினமலர் செய்தி : புதுடில்லி: இந்தியா, எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பற்ற நிலையில் இருக்க நான் அனுமதிக்க மாட்டேன் என, பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்ற மனோகர் பரிகர் கூறி உள்ளார்.

மத்திய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதில், 4 கேபினட் அமைச்சர்கள், 17 இணை அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். கேபினட் அமைச்சர்களாக பொறுப்பேற்றவர்களில் கோவா முன்னாள் முதல்வரான, மனோகர் கோபாலகிருஷ்ணா பிரபு பரிகர் முக்கியமானவர், ஒரு முதல்வராக இருந்து, மாநிலத்தை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்ற காரணத்தினால், தனது அமைச்சரவையில் முக்கிய பொறுப்பை பிரதமர் மோடி வழங்க விரும்பினார். இதையடுத்து, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பரிகர், பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்று,மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.


பொறுப்பேற்றார்:

மனோகர் பரிகர் இன்று பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். பதவி ஏற்ற கையோடு, பாதுகாப்பு துறையில் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தற்போதுள்ள சூழ்நிலையில், ராணுவத்தில் ஊழலை ஒழிப்பது, ஆயுத பற்றாக்குறையை தீர்ப்பது, சீனாவிற்கு இணையாக போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பது, எல்லை மோதல்களை கையாள்வது என்பன உள்ளிட்ட பல சவால் நிறைந்த பணிகள் பரிகருக்கு காத்துக் கொண்டுள்ளன. நமக்கு தேவையான ஆயுதங்களை உள்நாட்டிலேயே தயார் செய்ய வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கொள்கை. இதை, மேக் இன் இந்தியா திட்டத்தை அவர் அறிமுகம் செய்யும் போது மிகத் தௌிவாக கூறிவிட்டார். எனவே, மோடியின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டிய மிகப் பெரிய பொறுப்பும் பரிகருக்கு இருக்கிறது.
பரிகர் சூளுரை:

பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பரிகர், உ.பி., மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு போட்டியிடுவது பெருமிதம் அளிக்கிறது. 'நாடு, எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பற்ற நிலையில் இருக்க நான் அனுமதிக்க மாட்டேன். அண்டை நாடுகளுடனான பிரச்னை என்பது உணர்வுப்பூர்வமானது. எனவே இதுகுறித்து முழுமையாக அறிந்து கொள்ள எனக்கு சில காலம் அவகாசம் கொடுங்கள்,' என்று கூறினார்.

Comments