கணவன் கண் முன்னே இளம் பெண் பாலியல் பலாத்காரம்: நகைகளை கொள்ளையடித்து சென்ற கும்பல் கைது


தினமலர் செய்தி : பெங்களூரு: ஹெச்.எஸ்.ஆர்., லேஅவுட் பெல்லந்தூரில், கணவன், மாமியார், மகன் கண் எதிரிலேயே, பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து, தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் தாமதமாக தெரிய வந்துள்ளது.பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர்., லே அவுட் பெல்லந்தூரில் வீடு ஒன்றுக்குள், கடந்த அக்டோபர், 24ம் தேதியன்று இரவு, நான்கு மர்ம நபர்கள் புகுந்து, தாங்கள் போலீஸ்காரர்கள், உங்கள் வீட்டில் கஞ்சா வைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. சோதனையிட வேண்டுமென்று கூறி, அங்கிருந்த, 25 வயது பெண்ணை, நிர்வாணமாக்கினர். அவரது சேலையிலேயே, கணவன், மாமியார், 9 மாத கைக்குழந்தையை கட்டிப்போட்டு விட்டு, அப்பெண்ணை, இருவர் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதை, மற்ற இருவரும், தங்களது மொபைல் ஃபோனில் படம் பிடித்து கொண்டு, இது பற்றி வெளியே சொன்னால், வீடியோ காட்சியை வெளியிட்டுவிடுவேன், என்று பயமுறுத்தினர். வீட்டிலிருந்து, 30 கிராம் தங்க நகை, 10 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்து கொண்டு தப்பியோடினர்.பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது கணவன் குடும்பத்தினரும், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். கூலி வேலை செய்து, பிழைப்பு நடத்தி வருகின்றனர். இதனால், கவுரவத்துக்கு பயந்து, பாலியல் பலாத்கார சம்பவத்தை மறைத்து விட்டு, சம்பவம் நடந்த இரு நாட்களுக்கு பின்னர், 26ம் தேதியன்று, ஹெச்.எஸ்.ஆர்., லேஅவுட் போலீஸில், சில மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து திருடி சென்றதாக புகார் கொடுத்தனர்.குற்றவாளிகளின் போட்டோக்களை, அவர்களிடம் போலீஸார் காண்பித்தனர். அதிலிருந்த பழைய குற்றவாளி நந்தீஷை, அப்பெண் அடையாளம் காட்டினார். இதையடுத்து, நடவடிக்கை மேற்கொண்ட போலீஸார், நந்தீஷை கைது செய்தனர். இவர், கொடுத்த தகவலின் படி, இச்சம்பவத்தில் தொடர்புடைய, சைமன், சுஜித் குமார், அனில் குமார் ஆகியோரை கைது செய்து, விசாரித்தனர்.விசாரணையில், நகைகளை திருடியது மட்டுமின்றி, அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்தனர்.கவுரவத்துக்கு பயந்து, முதலில் பாலியல் பலாத்கார சம்பவத்தை மறைத்த பாதிக்கப்பட்ட பெண், போலீஸாரிடம் முழுமையான தகவல்களை தெரிவித்தார். கைது செய்யப்பட்ட நந்தீஷ், கிரிமினல் வழக்குகளில் தொடர்பு கொண்டுள்ளார். மற்ற மூவரும், முதன் முறையாக, இது போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். கைதானவர்கள், 20லிருந்து, 21 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள், காலின அக்ரஹாராவில் வசித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

Comments