பலத்த காற்று மற்றும் கனமழையால் கடற்கரையோர மாவட்டங்களான
விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயல்
காரணமாக விசாகப்பட்டினம் நகரம் பெரும் சேதத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள்
கூறுகின்றன. புயல் காரணமாக அங்கு மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொடர்பும் முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது.
புயலால் மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். மழைக்கு இதுவரை 3 பேர்
பலியாகியுள்ளனர். பலத்த காற்றால் கூரை வீடுகள் பறந்தன, மரங்கள் வேரோடு
சாய்ந்துள்ளன, மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன. விசாகப்பட்டினத்தில்
பேருந்து, ரயில் மற்றும் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. புயலால்
கடற்கரையோர பகுதிகளில் வாழும் ஆயிரக் கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு
பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதே போன்று ஒடிஸா
மாநிலத்தில் கடற்கரையோரம் உள்ள 8 மாவட்டங்களில் வசிக்கும் 3.5 லட்சம் பேர்
பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
புயல் கரையை கடந்தாலும் ஆந்திரா மற்றும் ஒடிஸாவில் அடுத்த 6
மணிநேரத்திற்கு மிக கன மழையும், அடுத்த 48 மணிநேரத்திற்கு மழையும் பெய்யும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி ஆந்திரா
முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வேண்டிய உதவி
செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
விசாகப்பட்டின மாவட்டத்தில் திரும்பும் பக்கம் எல்லாம் மரங்கள் விழுந்தும்,
மின் கம்பங்கள் சாய்ந்தும், மேற்கூரைகள் உடைந்தும் பார்ப்பதற்கே
அலங்கோலமாக உள்ளது. விசாகப்பட்டினத்தில் பலத்த காற்றால் பல கட்டிடங்கள்
சேதம் அடைந்துள்ளன. ஆந்திராவின் வடக்கு கடற்கரையோர பகுதிகளில் மின்
வினியோகம் சுத்தமாக இல்லை. இன்டர்நெட் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
புயலில் ஆந்திர மாநில அமைச்சர் பி. நாராயணாவின் கார் சேதம் அடைந்தது.
யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என ஆந்திர மாநில அரசு மக்களை
கேட்டுக் கொண்டுள்ளது.
Comments