
பழநி : பழநி கணக்கன்பட்டியில் கட்டாற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு
அரசு பள்ளியில் தங்கி இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதாக சர்ச்சை
எழுந்துள்ளது. இதை வருவாய்த்துறையினர் மறுத்துள்ளனர். பழநியில் சில
நாட்களாக பெய்த கன மழையால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது.
அக்.,20ல்
பழநி அருகே கணக்கன்பட்டி கோவிந்தபுரத்தில் 48 வீடுகளை சுற்றி தண்ணீர்
சூழ்ந்தது. இதனால் அப்பகுதியினர் அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.
வருவாய்த் துறையினர் ஒருவேளை உணவு மட்டும் வழங்கினர். கூடுதலாக அரிசி,
மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பள்ளிக்கு மாணவர்கள்
வந்ததால் அங்கு தங்கியிருந்தவர்களை வீடுகளுக்கு செல்லுமாறு அதிகாரிகள்
அறிவுறுத்தினர். அப்போதும் மழை பெய்து கொண்டிருந்தது. வீடுகளில் தண்ணீர்
வடிந்திருந்த போதும் சேறும், சகதியுமாக இருந்தது. வீடுகளை இழந்த மூன்று குடும்பத்தினர் கொட்டும் மழையில் நனைந்தபடி நின்றனர்.தாசில்தார் மாரியப்பன் அங்கு வந்து மழையில் நனைந்த குடும்பத்தினரை கணக்கன்பட்டி உயர்நிலைப் பள்ளியில் மீண்டும் தங்கவைத்தார்.
பாதிக்கப்பட்ட கன்னிமுத்து, வள்ளியம்மாள் கூறியதாவது: பள்ளிக்கு மாணவர்கள் வந்ததால்
எங்களை தங்கவேண்டாம் எனக்கூறி திருப்பி அனுப்பி விட்டனர். வீடுகள்
முழுமையாக சேதமடைந்துள்ளது. எந்த இடத்தில் சமையல் செய்வது என தெரியவில்லை.
மழையும் நிற்காமல் பெய்கிறது. உடை, ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றை இழந்து
தவிக்கிறோம். பல ஆண்டுகளாக இங்குதான் குடியிருக்கிறோம். வரதமாநதி அணை
நிறைந்திருப்பதால் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்படும் என்ற அச்சத்தில்
தூக்கமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். நிவாரண தொகையும், மாற்று
இடமும் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு கூறினர்.
தாசில்தார்
மாரியப்பன் கூறுகையில், ''பள்ளியிலிருந்து யாரையும் வெளியே அனுப்பவில்லை.
அவர்களாகத் தான் வீட்டிற்கு சென்றனர். மழை நிற்கும் வரை பள்ளியில்
தங்கிக் கொள்ளலாம். சேதமடைந்த வீடுகளுக்கு பதில் குடிசை வீடு அமைக்க
ரூ.5,000 வழங்க உள்ளோம்,” என்றார்.
Comments