வெ.இண்டீஸ் கிரிக்கெட் போர்டு மீது வழக்கு: பி.சி.சி.ஐ., அதிரடி நடவடிக்கை

ஐதராபாத்: சம்பள பிரச்னையை காரணம் காட்டி, கிரிக்கெட் போட்டிகளை ரத்து செய்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நாடு திரும்பிய பிரச்னையில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது. மேலும், அந்நாட்டுனான கிரிக்கெட் போட்டி உறவுகளையும் முறித்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.


இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, அவர்கள் நாட்டு கிரிக்கெட் வாரியத்துடனான சம்பள பிரச்னை காரணமாக, ஒரு நாள் போட்டி ஒன்றையும், டி-20 போட்டி ஒன்றையும் ரத்து செய்துவிட்டு தாய் நாடு திரும்பியது.

பெரும் நஷ்டம்

போட்டிகளை திடீரென ரத்து செய்ததால், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பெரிய சிக்கல் ஏற்பட்டது. மேலும், போட்டிகள் ரத்தானதால், பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வாரியத்தின் சஞ்சய் படேல் தெரிவித்தார்.

பி.சி.சி.ஐ., கூட்டம்:

இந்நிலையில், ஐதராபாத்தில் கிரிக்கெட் வாரியத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடந்தது. போட்டிகளை ரத்து செய்த விஷயத்தில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. மேலும், அந்நாட்டுனடான கிரிக்கெட் விளையாட்டு ஒப்பந்த உறவுகளை முறித்துக் கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மன்னிப்பு நிராகரிப்பு:

நடந்த சம்பவத்திற்கு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் மன்னிப்பு கோரியிருந்தது. மேலும், ஸ்பான்சர்கள், நேரடி ஒளிபரப்புக்கு ஒப்பந்தமான சேனல்கள், மற்றும் ரசிகர்கள் ஆகியோரிடமும் மன்னிப்பு கோரப்பட்டது. ஆனால், இந்தியா இதை நிராகரித்துவிட்டது.

வருகிறது இலங்கை:
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான போட்டிகள் ரத்தாகிவிட்ட நிலையில், இலங்கையுடன் போட்டிகள் நடக்க உள்ளன. அடுத்த மாதம் 2ம் தேதி முதல், 5 ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி இந்திய அணியுடன் விளையாடுகிறது. இந்த போட்டிகள் அடுத்த ஆண்டு நடக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments