இலங்கை மீன்களுக்கு ஐரோப்பிய யூனியன் தடை: சட்டவிரோதமாக மீன்பிடித்ததால் நடவடிக்கை

கொழும்பு: பலமுறை எச்சரித்தும், சர்வதேச விதிமுறைகளை மீறி, தொடர்ந்து சட்டவிரோதமாக இலங்கை மீன்பிடித்து வருவதால், அடுத்த மூன்று மாதங்களுக்கு அந்நாட்டில் இருந்து மீன் பொருட்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது.

இலங்கையின் பிரதான தொழிலாக மீன் பிடித்தல் உள்ளது.
இலங்கை மீன்களுக்கு சர்வதேச அளவில் நல்ல சந்தை உள்ளது. ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகளுக்கு அதிக அளவில் இலங்கை மீன்களை விற்பனை செய்கிறது. இந்நிலையில், இலங்கை மீன்களையும், மீன் பொருட்களையும் இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது.

காரணம் என்ன?:

இந்திய பெருங்கடலில் சர்வதேச விதிமுறைகளை மீறி, பெரிய படகுகளில் இலங்கை தொடர்ந்து மீன்பிடித்து வருகிறது. சட்டவிரோதமான இந்த செயலை நிறுத்த வேண்டும் என, ஐரோப்பிய யூனியன் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து கூறி வந்தது. ஆனால், அதை இலங்கை கண்டு கொள்ளவில்லை. இதனால் அதிருப்தியடைந்த ஐரோப்பிய யூனியன் அமைப்பு, இந்த தற்காலிக தடையை விதித்துள்ளது.

தடைக்கு விளக்கம்:

இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து ஐரோப்பிய யூனியன் மீன்வளத்துறை மற்றும் கடற்சார் துறை அமைச்சர் மரியா தமானகி கூறுகையில், 'சட்டவிரோத மீன்பிடிப்பு வேண்டாம் என எச்சரி்த்தும், கடந்த 2 ஆண்டுகளாக இலங்கையின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. மாறாக, நாளுக்கு நாள் சட்டவிரோத மீன்பிடிப்பு அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய யூனியனுக்கு மீன் மற்றும் மீன் பொருட்களை அதிகமாக அனுப்பும் நாடுகளில் இலங்கை இரண்டாவதாக உள்ளது. ஆனால், சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டு, அனுப்பப்படும் மீன்களை உண்ண ஐரோப்பிய யூனியன் மக்கள் விரும்பவில்லை. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது,' என்றார்.

அதிர்ச்சி:

இலங்கையில் இருந்து அதிகமாக மீன் மற்றும் மீன் பொருட்களை இறக்குமதி செய்து வந்த ஐரோப்பிய நாடுகள், அதற்கு தடை விதித்துள்ளதால் இலங்கை அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments