ஆந்திரா- ஒடிசாவை மிரட்டும் புயல்; பிரதமர் மோடி அவசர ஆலோசனை


புதுடில்லி: விசாகபட்டினம் அருகே தென்கிழக்கு பகுதியில் மையம் கொண்டிருக்கும் ஹூட் ஹூட் புயல் வலுவடைந்து வருகிறது. வானிலை மையம் அறிவித்தை விட முன்கூட்டியே நாளை காலைக்குள் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு கரை கடந்து செல்லும் போது மணிக்கு 180 முதல் 195 கி.மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும். கடல் அலைகள் 20 மீட்டருக்கும் மேல் உயர எழும்பக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது கொடூர புயலாக இருக்கும் என்று எச்சரித்துள்ளது. இதனால் ஆந்திர கடலோர மாவடங்களான விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம், கோதாவரி உள்ளிட்ட 5 மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக 450 கிராமங்கள் இந்த புயலை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும்.

சமீபத்திய காஷ்மீர் மழை வெள்ளம் காரணமாக அந்த மாநிலமே பெரும் சேதத்தை சந்தித்தது. இதனால் இது போன்ற சேதத்தை தவிர்க்க மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
ராணுவத்தினர் தயார்: தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ரயில்கள், விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடலோர பகுதி மக்கள் ஒருலட்சத்திற்கும் மேலானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த புயலால் ஒடிசாவின் தென் கடலோர பகுதிகளும் பாதிப்பை சந்திக்க நேரிடும்.

இதற்கிடையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எடுக்கப்பட்டுள்ள மற்றும் எடுக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி உயர் மட்ட அதிகாரிகளுடன் இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளார்.

Comments