ஜெ., ஜாமின் மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி சுப்ரீம் கோர்ட் தலைமை
நீதிபதி தத்து தலைமையில் மதன் பி லோக்கூர், ஏ.சி. சிக்கிரி ஆகியோரை கொண்ட
பெஞ்ச் விசாரித்தது.
ஜெ., தரப்பில் பிரபல பாலி நாரிமன் ஆஜராகி வாதிட்டார். இவர் தனது வாதுரையில்
, ஜெ., ஒரு முக்கிய பதவி வகித்தவர் என்பதை கர்நாடக ஐகோர்ட் கருத்தில்
கொள்ளவில்லை. தண்டனையை நிறுத்தி வைக்கத்தான் நாங்கள் கேட்டோம். ரத்து செய்ய
சொல்லவில்லை. இதனால் சுப்ரீம் கோர்ட் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்.
ஜெ., உடல்நிலை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்கிட வேண்டும் என்றும்
வாதிட்டார்.
தண்டனையை நிறுத்தி வைப்போம் என நினைக்க வேண்டாம். நிறுத்தினால் மேல்
முறையீட்டை எத்தனை நாட்களுக்குள் முடிப்பீர்கள் ? என நீதிபதிகள் ஜெ.,
வக்கீல் பாலி நாரிமனிடம் கேட்டனர். மேல் முறையீட்டுக்கு முழு ஒத்துழைப்பு
கொடுப்போம் என்றார் நாரிமன். இதனையடுத்து நீதிபதிகள் நிபந்தனையுடன் கூடிய
ஜாமின் வழங்கினர்.
நீதிபதிகள் ஜாமின் வழங்கி பிறப்பித்த உத்தரவில், மேல் முறையீட்டு ஆவணங்களை 2
மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து வழக்கை 3
மாதங்களில் விசாரித்து முடிக்க துணை புரிய வேண்டும். எந்தவொரு காரணத்தையும்
காட்டி வாய்தா கேட்டு இழுத்து அடிக்க கூடாது. டாக்டர்கள் மட்டுமே சந்திக்க
அனுமதி உண்டு. தமிழகத்தில் தங்களின் தொண்டர்கள் எவ்வித சட்டம் ஒழுங்கு
பிரச்னைக்கும் காரணமாக இருக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். ஜெ., டிசம்பர்
மாதம் 18ம் தேதிக்குள் மேல் முறையீட்டு ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டும்.
இதில் காலம் தாமதம் செய்தால் ஜாமின் உடனடியாக ரத்து செய்யப்படும் இவ்வாறு
நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
மேற்கூறிய அனைத்து நிபந்தனைகளுக்கும் ஜெ., தரப்பு வழக்கறிஞர் நாரிமன்
முழுமையாக ஏற்று கொள்வதாக கூறினார். தண்டனை நிறுத்தி வைப்பு மட்டும்
எங்களின் முழு கோரிக்கை என்றார். மேலும் வாய்தா காலம் வரை ஜெ.,
வீட்டிற்குள்ளேயே இருக்க சொன்னாலும், நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றும்
நாரிமன் தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள் இவ்வாறு நாங்கள் ஒன்றும்
கட்டுப்பாடு விதிக்கவில்லை. என்றனர்.
நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை:
சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து ஜெ., வக்கீல் குமார் என்பவர் கூறுகையில்
எவ்வித நிபந்தனையும் இவ்வாறு விதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். இரு
நபர் ஜாமின் மட்டும் போதுமானது என்றும் தெரிவித்தார்.
உடல் ரீதியிலான பிரச்னை ; சாமி:
கோர்ட் வளகத்தில் , சுப்பிரமணிய சுவாமி நிருபர்களிடம் கூறுகையில், இந்த
வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்கக அவரது வக்கீல் கேட்டார். மேலும் அவரது
உடல்நிலை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என்றார். உடல் ரீதியிலான
பிரச்னை என்பதால் நான் ஒன்றும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இருப்பினும்
நீதிபதிகள் கடும் நிபந்தனை கூறியுள்ளனர். அவர் எங்கும் செல்லக்கூடாது,
கடந்த காலத்தில் பிரபல வக்கீல் கொண்டு பல வாய்தாக்கள் வாங்கியுள்ளனர் என்று
கோர்ட்டில் நான் தெரிவித்தேன். இதனை நீதிபதிகள் ஏற்று கொண்டனர் .
கோர்ட் கொடுத்த கெடு காலத்தில் ஒருநாள் தாமதித்தாலும் ஜெ., ஜாமின் ரத்து செய்யப்படும். இவ்வாறு சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தார்.
Comments