பொதுக்குழு கூடுமா; புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்படுவரா? : தமிழக பா.ஜ.,வில் குழப்பம் நீடிப்பு

தமிழக பா.ஜ., தலைவராக, தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்று, இரண்டு மாதங்களாகும் நிலையில், இன்னும் அக்கட்சிக்கு மாநில நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை; தேசிய பொறுப்
பாளரும் அறிவிக்கப் படவில்லை. இதனால், கிடப்பில் போடப்பட்டுள்ள, புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்து விவாதிப்பதற்காக, கட்சியின் மாநில பொதுக்குழுவை, 19ம் தேதி கூட்ட திட்டமிடப்பட்டுள்ளது.


சந்தேகம் : இந்த கூட்டமும், இந்த தேதியில் நடக்குமா என்ற சந்தேகம், இப்போது, கட்சி வட்டாரத்தில் எழுந்துள்ளது. அதற்கு காரணம், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவரும், மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், ஜனாதிபதியுடன் நார்வே, பின்லாந்து போன்ற நாடுகளுக்கு, 12ம் தேதி முதல், பயணம் செல்கிறார். அவரால் பங்கேற்க முடியாத நிலை வந்தால், பொதுக்குழு கூட்டம் தள்ளிப் போடப்படும் என்றே கூறப்படுகிறது. அநேகமாக, தீபாளிக்கு பிறகு தான் பொதுக்குழு கூடி, இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கும் என, கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, பா.ஜ., வட்டாரம் மேலும் கூறியதாவது: தமிழக பா.ஜ., தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், கடந்த மே, 26ம் தேதி மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார். அதையடுத்து, அவரால் தலைவர் பதவியில் நீடிக்க முடியாத நிலை உருவானது.

புதிய தலைவராக யாரை நியமிப்பது என்ற விவாதம், கட்சியில் எழுந்தது. இதில் ஏற்பட்ட இழுபறி மூன்று மாதம் நீடித்தது. இறுதியாக, கடந்த ஆகஸ்ட், 16ம் தேதி, தமிழிசை சவுந்தரராஜன், தலைவராக நியமிக்கப்பட்டார். அதற்கு பிறகும், கட்சியின் தேசிய பொறுப்பாளர்கள் யார் என்ற விவரம் வெளியிடப்பட வில்லை. தேர்தலுக்கு முன் வரை, முரளீதர் ராவ், சதீஷ் ஆகியோர் இப்பொறுப்பில் இருந்தனர். இப்போதும் இவர்கள் நீடிக்கின்றனரா என்பதும் தெரியவில்லை. இந்த குழப்பம் தீராத வரையில், புதிய நிர்வாகிகளை நியமிப்பது கடினம். மேலிட பொறுப்பாளரிடம் கலந்து பேசித் தான், தமிழக தலைவரால் செயல்பட முடியும். நிர்வாகிகள் நியமனமும் அப்படித்தான் செய்யப்பட வேண்டும்.

தீபாவளிக்கு பிறகு... : அரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் நடக்கும் தேர்தல் பணிகளில், தேசிய தலைவர் அமித் ஷா, 'பிசி'யாக இருக்கிறார். அது முடிந்த பிறகு தான், இதில் முடிவு கிடைக்கும். இதற்கிடையில், மாநில பொதுக்குழு இதுவரை கூட்டப்படவில்லை. புதிய தலைவர் பொறுப்பேற்ற பின், பொதுக்குழு கூடி, அவரது நியமனத்தை அங்கீகரிக்க வேண்டும். அதோடு, புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து விவாதிக்கலாம் என கருதி, வரும், 19ம் தேதி, பொதுக்குழு கூடும் என, கூறப்பட்டுள்ளது. ஆனால், அன்றைய தினம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் முடிவு வெளியாக உள்ளது. எனவே, அந்த தேதியில் பொதுக்குழுவை கூட்ட வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, தீபாவளிக்கு பிறகு தான், பொதுக்குழு கூடும் என்றே தெரிகிறது. இவ்வாறு, பா.ஜ., வட்டாரம் தெரிவித்தது.

Comments