டாஸ்மாக் கடை போராட்டத்தில் பெண் போலீசாருக்கு 'அடி உதை'

நாகப்பட்டினம் : நாகை அருகே ஜன நாயக மாதர் சங்கம் சார்பில் டாஸ்மாக் கடையை பூட்டும் பேராட்டத்தின்போது, பெண் எஸ்.ஐ., மற்றும் இரண்டு பெண் போலீசார் தாக்கப்பட்டனர்.
நாகை மாவட்டம் சாட்டியக்குடியில், இரு பள்ளிகளின் அருகிலும், 11 கிராம மக்கள் கூடும் முக்கிய சந்திப்பான பஸ் நிறுத்தத்தில் டாஸ்மாக் கடை (எண் 5757) இயங்கி வருகிறது.
இக்கடையை மாற்ற வேண்டும் என, ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலம் தழுவிய டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடந்தது. அதையடுத்து, ஜனநாயக மாதர் சங்க தேசிய துணை தலைவர் வாசுகி, மாவட்ட தலைவர் லதா தலைமையில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக சென்று, சாட்டியகுடி பஸ் நிறுத்தத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயன்றனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில், வலிவலம் எஸ்.ஐ., சுமதி, பெண் போலீசார் சந்தானலட்சுமி, சத்யா ஆகியோரை போராட்ட பெண்கள் தாக்கினர். தடுக்க முயன்ற மற்ற போலீசாருக்கும் அடி உதை விழுந்தது. அதையடுத்து, டாஸ்மாக் கடையை பூட்டிய பின், போராட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், ஏ.எஸ்.பி.,சசாங் சாய், உதவி ஆணையர் தேன்மொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். 45 நாட்களில் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்வதாக, உதவி ஆணையர் தேன்மொழி அளித்த உறுதியின்பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. பெண்களின் போராட்டத்தால் நாகை திருத்துறைப்பூண்டி சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Comments