தமிழகத்தில் அரசு இயந்திரம் முடங்கிவிட்டது: குடியரசுத்தலைவருக்கு கருணாநிதி கடிதம்

தமிழகத்தில் அரசு இயந்திரம் முடங்கிவிட்டது: குடியரசுத்தலைவருக்கு கருணாநிதி கடிதம்சென்னை: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கும், உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் குடியரசுத்தலைவருக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, அவர் எழுதியுள்ள கடிதம்: பெங்களூருவில் நடந்த, சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதா மற்றும் வழக்கில் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது.

ஆளும் அ.தி.மு.க.,வினர், தி.மு.க., தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளுக்கு சென்று, தாக்குதல் நடத்துகின்றனர்.அவர்கள், பா.ஜ., தலைவர் சுப்பிரமணியன் சாமியின், சென்னை வீட்டில் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர் சொத்துக் குவிப்பு வழக்கின் மனுதாரர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், அ.தி.மு.க.,வினர், அப்பாவி மக்களை தாக்கி, அவர்களின் உடமைகளை சேதப்படுத்தி, மக்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்துகின்றனர். அ.தி.மு.க.,வினர் வன்முறையில் ஈடுபடுவதை, போலீசார் வேடிக்கை பார்க்கின்றனர். இதனால், தமிழகத்தில், அரசு இயந்திரம் முற்றிலும் செயல் இழந்துள்ளது. வன்முறையில் ஈடுபடுவோர் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பவர்.எனவே, உடனடியாக சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும், பொது அமைதியை ஏற்படுத்தவும், மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீதும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத, போலீஸ் அதிகாரிகள் மீதும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். இக்கடிதத்தின் நகல், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய உள்துறை அமைச்சர், உள்துறை செயலர், தமிழக கவர்னர், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமைச் செயலர், தமிழக உள்துறை செயலர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Comments