வழக்கில் விடுதலை வேண்டி கோவில்களில் பிரார்த்தனை

முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளில், அ.தி.மு.க.,வினர், கோவில், தேவாலயம், மசூதி ஆகிய வழிபாட்டு தலங்களில், சிறப்பு பிரார்த்தனை நடத்தி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடுவர்.

இந்து சமய அறநிலையத் துறையினரும், முக்கிய நிகழ்வுகளின்போது, முதல்வருக்காக, கோவில்களில் பிரார்த்தித்து, அவருக்கு பிரசாதம் வழங்குவதும் வழக்கம்.
இந்நிலையில், கடந்த 1991--96ம் ஆண்டு, அவர் முதல்வராக இருந்த காலகட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, வழக்கின் தீர்ப்பு வரும் 27ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், வழக்கில், சாதக தீர்ப்பிற்காக, கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தி, பிரசாதம் அனுப்பி வைக்கும்படி, அறநிலையத் துறை உயரதிகாரிகள், கோவில் செயல் அலுவலர்களுக்கு, வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர்.

இதையடுத்து, கோவில்களில், இரு நாட்களாக சிறப்பு பிரார்த்தனை நடத்தி, மலர்மாலை, தேங்காய் உட்பட பிரசாத பொருட்களை, அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில், கோவில் அலுவலர்கள் ஒப்படைத்து வருகின்றனர்.

இதுகுறித்து, அறநிலையத் துறை அலுவலர்கள் கூறுகையில், 'சொத்து குவிப்பு வழக்கில், சாதகமான தீர்ப்பு கிடைக்க வேண்டி, தமிழகத்தின் முக்கிய கோவில்களில் பிரார்த்தித்து, பிரசாதத்தை தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்து உள்ளோம்; அதை முதல்வர் வீட்டில், அதிகாரிகள் ஒப்படைப்பர்' என்றனர்.

Comments