உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஓட்டளிக்க ஆர்வமில்லை: காத்தாடும் ஓட்டுச்சாவடிகள்

சென்னை: தமிழகத்தில் இன்று நடந்து வரும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஓட்டளிக்க வாக்காளர்கள் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. இதனால் பல ஓட்டுச்சாவடிகளில் அதிகாரிகள் வெறுமனே அமர்ந்திருந்து வாக்காளர்களை எதிர்பார்த்து காத்திருந்தனர். தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகளில் காலியாக உள்ள இடங்களுக்கான இடைத்தேர்தல் இன்று நடந்து வருகிறது.
மொத்தமுள்ள 503 உள்ளாட்சி பதவிகளுக்கான போட்டியில் 1,488 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும் அ.தி.மு.க.,வுக்கு எதிராக, தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் இடைத்தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியுள்ள நிலையில், களத்தில் பா.ஜ., மட்டுமே உள்ளது. தேர்தலுக்கு முன்பாகவே, பல இடங்களில் ஆளும் கட்சியினர் வேட்பாளர்களை கடத்தியது, மிரட்டியது, தாக்கியது என தேர்தல் களம் சூடுபிடித்து காணப்பட்டது. நெல்லை மேயர் தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர், தனது வேட்புமனுவை வாபஸ் பெற்று விட்டு, அ.தி.மு.க.,வில் இணைந்து அதிர்ச்சியளித்தார். இதே போல், குன்னூர் உள்ளிட்ட சில இடங்களில் வேட்பாளர்கள் வாபஸ் பெற்றனர்.

இந்த சூழ்நிலையில், தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. இந்த ஓட்டுப்பதிவு இன்று மாலை 5 மணி வரை நடக்கவுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. கோவையைப் பொறுத்தவரையில், மாநகராட்சி பகுதிகளில் காலை 11 மணி நிலவரப்படி 19.45 சதவீதமும், புறநகர்ப்பகுதியில் 31.35சதவிதமும் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. மற்றொரு மேயர் தேர்தல் நடக்கும் தூத்துக்குடியில் காலை 11 மணி நிலவரப்படி, மாநகராட்சி பகுதிகளில் 23 சதவீதமும், புறநகர்ப்பகுதியில் 13 சதவீதமும் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.


தேர்தல் கமிஷனர் பேட்டி:

தமிழகத்தில் நடந்து வரும் உள்ளாட்சி தேர்தலில் தற்போது வரை, 30 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இதுவரை எவ்வித புகாரும் வரவில்லை. புகார்களை எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யர் தெரிவித்துள்ளார்.

Comments