ஐ.எஸ். அமைப்பை பார்த்து அமெரிக்கா கிலி: மோடி உதவியை எதிர்பார்த்து காத்திருப்பு

வாஷிங்டன்: ஈராக் மற்றும் சிரியா உள்ளிட்ட நாடுகளில் தனது வலிமையை பயன்படுத்தி தனி நாடு அமைத்துள்ள ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, உலகம் முழுவதும் வியாபிக்கும் என்பதால் அமெரிக்கா அச்சமடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த அமைப்பை கட்டுப்படுத்த இந்தியாவின் உதவியை கோரவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி அங்கு செல்லும் போது இது குறித்து அவரிடம் நேரில் பேச அதிபர் ஒபாமா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பு ஈராக் மற்றும் சிரியாவில் காலூன்றி, தனி நாட்டை அமைத்துள்ளது. பல முக்கிய நகரங்கள் அந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளன. போலீஸ் நிலையங்கள், சோதனை சாவடிகள் என அமைத்து, ஐ.எஸ்., அமைப்பு தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது. அமெரிக்க, பிரிட்டனைச் சேர்ந்த மூவரை கொலை செய்து, அந்நாடுகளுக்கு சவால் விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஐ.எஸ். அமைப்பிற்கு எதிராக செயல்பட துவங்கி உள்ளன.

கெர்ரி பயணம்:

ஐ.எஸ்., அமைப்பின் தொடர் அராஜகத்தை அடுத்து, அந்த அமைப்பை வேரோடு அழிப்பேன் என அமெரிக்க அதிபர் ஒபாமா சபதம் மேற்கொண்டுள்ளார். சர்வதேச நாடுகள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என அழைப்பும் விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து, அமெரிக்க வௌியுறவு அமைச்சர் ஜான்கெர்ரி 10க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பறந்து சென்று, தங்கள் நிலைப்பாட்டிற்கு ஆதரவு கோரினார்.

மோடி-ஒபாமாசந்திப்பு:

ஐ.எஸ். அமைப்பின் அட்டகாசத்தை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவின் உதவியையும் அமெரிக்கா கோர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் நரேந்திரமோடியின் அமெரிக்க பயணத்தின்போது, வரும் 29ம் தேதி அதிபர் ஒபாமாவை வௌ்ளை மாளிகையில் வைத்து சந்திக்கிறார். அப்போது, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு குறித்து பிரதமர் நரேந்திரமோடியுடன் அதிபர் ஒபாமா விரிவாக பேச உள்ளார் என தகவல்கள் கூறுகின்றன.

Comments