மீடியாக்களை குழிதோண்டி புதைப்போம்: சந்திரசேகரராவின் சவடால் பேச்சு

ஐதராபாத்: தெலுங்கானாவை அவமதிக்கும் வகையிலான செய்திகளை வௌியிடும் மீடியாக்களை, ஆழமாக குழிவெட்டி அதில் போட்டு புதைத்துவிடுவோம் என, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேசி உள்ளார். இதற்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கோரி போராட்டம் நடத்திய சந்திரசேகர ராவ், காங்கிரஸ் கட்சியை கையில் போட்டுக் கொண்டு, தனது காரியத்தை சாதித்துக் கொண்டார்.
தெலுங்கானா மாநிலம் குறித்த அறிவிப்பு வௌியான பின்னர், காங்கிரசுடன் இருந்த உறவை 'கட்' செய்த ராவ், பின்னர் சோலோவாக சட்டசபை தேர்தலை சந்தித்து, வெற்றியும் பெற்றார். பின்னர், தெலுங்கானா மாநில முதல்வராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் முதல்வர் ஆனதில் இருந்தே, அதிரடி நடவடிக்கைகளால் மீடியாக்களில் பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.


அதிர்ச்சி அறிக்கைகள்:

தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள் குறித்த புள்ளிவிவரத்தை அம்மாநில அரசு சேகரித்தது. இதற்காக, மாநில அளவில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஒரே நாளில் இப்பணியை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதால், இந்தியாவி்ன் பல்வேறு மாநிலங்களில் குடியிருந்து வரும் தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள் அடித்து பிடித்து சொந்த ஊருக்கு போய், பட்டியலில் பெயர் கொடுத்துவிட்டு திரும்பினர். இது குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், பிரதமர் மோடியை சந்தித்து சந்திரசேகர ராவ் விளக்கம் அளித்துவிட்டு திரும்பினார்.

மகளும் அதிரடி:

இதற்கிடையில், சந்திரசேகரராவின் மகளும், அக்கட்சியின் எம்,பி.யுமான கவிதாவும், அப்பா ஸ்டைலிலேயே அதிரடி அறிக்கைகளை விடுவதில் தேர்ந்துவிட்டார். சில நாட்களுக்கு முன்னர், சுதந்திரத்திற்கு பின் எடுக்கப்பட்ட முயற்சியின் போது, இந்தியாவுடன் ஆந்திரா இணைய விரும்பவில்லை, ஆனால், வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டது. இந்தியாவில் இணைய விருப்பமில்லை என்ற கருத்தை நானும் ஏற்றுக் கொண்டுள்ளேன்,' என்று கூறி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதைத் தொடர்ந்து இவர் மீது வழக்குகள் தொடரப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
மீடியாக்கள் மீது எரிச்சல்:

இந்நிலையில், மீடியாக்கள் மீது சந்திரசேகர ராவ் பாய்ந்துள்ளார். தெலுங்கானா மாநிலம் குறித்து அவமரியாதையான தகவல்களை பரப்பும் மீடியாக்களை, மண்ணில் போட்டு புதைத்து விடுவோம் என, அவர் கூறி உள்ளார். வாராங்கலில் நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய அவர், 'தெலுங்கானாவை அவமதிக்கும் பத்திரிகையாளர்களின் கழுத்தை நெறிப்பதற்கு கூட நாங்கள் தயங்க மாட்டோம். அனைத்து மீடியாக்களும், தெலுங்கானாவிற்கும், தெலுங்கானா மக்களுக்கும் மரியாதை கொடுக்க கற்றுக் கொள்ள வேண்டும்,' என்றார். இந்த வன்முறை பேச்சின் முடிவில், 'எங்களை மதிப்பவர்களுக்கு 'சல்யூட்' அடிப்போம்'. தெலுங்கானாவை அவமதிக்கும் வகையிலான செய்திகளை வௌியிடும் மீடியாக்களை, ஆழமாக குழிவெட்டி அதில் போட்டு புதைத்துவிடுவோம் என்று கூறி உள்ளார். மீடியாக்கள் குறித்து சந்திரசேகரராவ் பேசியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி, ஐதராபாத்தில் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் ரேணுகா சவுத்திரி, சந்திரசேகரராவின் மீடியா மீதான பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அப்பா சொன்னா தப்பாகாது: கவிதா

மீடியாக்களை மண்ணில் புதைக்க வேண்டும் என்ற தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவ் பேச்சுக்கு அவரது மகளும், எம்.பி.,யுமான கவிதா முழு ஆதரவு தெரிவித்துள்ளார். மீடியாக்கள் தெலுங்கானா மாநிலத்தின் சென்டிமென்ட்டை மதித்து நடக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Comments