செவ்வாய், சந்திரனுக்கு மனிதர்களை அனுப்ப ஆய்வு : விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தகவல்

ராமேஸ்வரம் : "செவ்வாய், சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் தொழில்நுட்பம் குறித்து இந்திய விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்,” என பிரம்மோஸ் ஏவுகணை திட்ட முன்னாள் இயக்குனர் சிவதாணுபிள்ளை தெரிவித்தார்.

ராமேஸ்வரம் கோயில் ராமர் தீர்த்தக்குளம் தூர்வாரும் பணி துவக்க விழாவில் பங்கேற்ற அவர் கூறியதாவது:
கண்டம் விட்டு கண்டம், குறுகிய தூர இலக்குகளை தாக்கும் வகையில் 1983ல் 'அக்னி', 'பிரித்வி', 'ஆகாஷ்' ஏவுகணை தயாரிப்பில் ராணுவ ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்; இன்று 'அக்னி', 'பிரித்வி' ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. 'ஆகாஷ்' சோதனைகள் முடிந்து, உற்பத்தி பிரிவில் உள்ளது. தற்போது உள்ள 'சூப்பர் சோனிக் பிரம்மோஸ் ஏவுகணை' தரைப்படை, கடற்படை, விமானப்படை என மூன்று பிரிவிலும் பயன்படுத்தப்படுவது, இந்தியாவில் மட்டும் தான். மேலும், ஒளியை விட அதிவேகமாக செல்லும் வகையில், 'ஹைபர் சோனிக்' பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். 'மங்கள்யான்' ராக்கெட் செப்., 24ல் செவ்வாய் கிரகத்தில் சென்றடைந்து, 'ஹீலியம் -3' எனும் மாற்று சக்திக்கான பொருளை படம் எடுத்து, 'இஸ்ரோ'வுக்கு அனுப்ப உள்ளது. எதிர்காலத்தில் இந்தியாவில் 'தோரியம்' பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில், 'ஹீலியம்-3' யை 'யுரேனியத்துடன்' இணைத்து மின்ச ாரம் மற்றும் பிற பயன்பாட்டிற்கு கொண்டு வரமுடியும். செவ்வாய்க்கு ராக்கெட் செல்ல ஒன்பது மாதங்கள் ஆகின்றன. குறுகிய காலத்திற்குள் செல்ல அதிவேக ராக்கெட் தயாரிப்பில், உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. செவ்வாய், சந்திரனுக்கு மனிதர் அனுப்ப இந்திய விஞ்ஞானிகள் 'ரீ என்ட்ரி' (திரும்பி வருதல்) தொழில்நுட்பம் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். வெளிநாட்டு சதியை தகர்த்து, உள்நாட்டு தொழில்நுட்பத்தில் நவீன பாதுகாப்பு அம்சங்களை இந்திய ராணுவம் பெற்றுள்ளது. இவ்வாறு கூறினார்.

Comments