300 நாள் பயணம் 5 கோடி கி.மீ., தூரம்: செவ்வாய் சுற்றுப்பாதையில் மங்கள்யான்

செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா முதன்முதலாக ஏவிய மங்கள்யான் செயற்கைக்கோள், 300 நாட்களாக 5 கோடி கி.மீ., தூரம் பயணம் செய்து, நாளை (செப்.24) செவ்வாயின் சுற்று வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைகிறது.

பூமியிலிருந்து செவ்வாய்க்கு குறைந்தபட்ச தூரம், அதிகபட்ச தூரம் என உண்டு. சூரியனை இரண்டு கிரகங்களும் வெவ்வேறு பாதையில் சுற்றுவதால் இந்த வித்தியாசம் ஏற்படுகிறது.
செவ்வாய்க்கு குறைந்தபட்ச தூரம் 5 கோடி கி.மீ., அதிகபட்ச தூரம் 40 கோடி கி.மீ., குறைந்தபட்ச தூரத்தில் செவ்வாய் வருவதை கணித்து, செயற்கைக்கோள் ஏவப்பட்டது. தற்போது தவறவிட்டால் 2016ம் ஆண்டுதான் மீண்டும் இந்த வாய்ப்பு கிடைக்கும்.இதுவரை செவ்வாய்க்கு அனுப்பிய விண்கலங்கள் 50 சதவீதம் மட்டுமே வெற்றியடைந்துள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு ஆகியவை மட்டுமே செவ்வாய்க்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியுள்ளன. பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ஜப்பான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. மங்கள்யான் திட்டம் முழு வெற்றியடைந்தால் செவ்வாய்க்கு செயற்கைக்கோள் அனுப்பிய நான்காவது நாடாக இந்தியா இருக்கும்.மங்கள்யான், ஆறு மாதங்களில் 60 முறை செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து ஆராய்ச்சி மேற்கொள்ளும். முழுவதும் சூரிய சக்தியில் செயல்படும் மங்கள்யானில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஐந்து உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Comments