பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம்

'சுற்றுலா' -பரபரப்பான வாழ்க்கை சூழலில் சிக்கித் தவிக்கும் இன்றைய மனிதர்களுக்கான 'ரீ சார்ஜ்' செய்யும் கருவி. கம்ப்யூட்டர் யுகத்தில் மனிதர்கள், கடிகார முள்ளைவிட வேகமாக சுழன்று கொண்டு, 24 மணிநேரம் போதவில்லை என்கின்றனர்.

மனதிற்குள் ஏதாவது ஒரு லட்சியத்தை சுமந்துகொண்டு இயந்திரங்களை காட்டிலும் வேகமாக ஓட முயன்று, துவண்டு விடுகின்றனர்.
எனவே தான் ஓய்வு நேரங்களில் இயந்திரமயமற்ற, 'ஆணையிடும் மனிதர்' இல்லாத இடங்களை நோக்கி பயணிக்கின்றனர்.


'சுற்றுலா பயணி' யார் :

24 மணிநேரத்திற்கும் மேலாக தன்னுடைய இருப்பிடத்தை விட்டு வேறொரு இடத்தில் 'ஓய்வு' மன மகிழ்ச்சிக்காக தங்குபவர்களே சுற்றுலா பயணிகள் ஆவர்.சுற்றுலாவின் அடிப்படையே 'பயணங்கள்' தான். பழங்காலத்தில் இருந்தே மனிதன் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்துள்ளான். அவை பெரும்பாலும் உணவு சேகரிக்கும் பயணமாக இருந்தது. 'ஏதேன் தோட்டத்தில் இருந்து வெளியேறிய ஆதாமும், ஏவாளும் தங்கும் இடம் தேடி அலைந்தனர்' என கருதப்படுகிறது. எனவே அவர்களே வரலாற்றில் முதல் பயணிகள் எனலாம்.மனிதன் ஓரிடத்தில் நிலையாக வாழக் கற்றுக்கொண்ட பின் நகரங்கள் உருவாகின. இதன் பின் பயணங்கள் அதிகரித்தன. நாளடைவில் வியாபாரிகளாலும், வணிகர்களாலும் தூரப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதுவே தற்கால சுற்றுலா பயணங்களுக்கு அடிப்படை. வர்த்தகர்களின் பயணங்களால் பல புதிய வணிகப் பாதைகள் தோன்றின. இது, உலக மக்களிடையே ஒரு கலாசார, பண்பாட்டு தொடர்பை வளர்த்தது. இந்த மாற்றம் பயணங்களை ஊக்கப்படுத்தியது.
சுற்றுலா துவக்கம் :

உலகிலேயே மகிழ்ச்சியாக பயணம் மேற்கொண்டவர்களில் முதன்மையானவர்கள் ரோமானியர். குதிரைகள் மூலம் ஒரே நாளில் நுாற்றுக்கணக்கான மைல் தூரம் பயணம் செய்தனர். பெரும்பாலும் எகிப்து பிரமிடுகளையும் புகழ்பெற்ற ஒலிம்பிக் பந்தயங்களை காணவுமே பயணம் மேற்கொண்டனர். இன்று சிகிச்சைக்காக உலகின் பல நாடுகளுக்கு மக்கள் பயணிக்கின்றனர். இது 'மருத்துவ சுற்றுலா' எனப்படும். இதை அறிமுகப்படுத்தியவர்கள் ரோமானியர்கள். மூலிகை நிறைந்த நீரில் குளிக்க அருவிகளுக்கும், ஆற்றங்கரைகளுக்கும் சுற்றுலா மேற்கொண்டனர். 'ஸ்பாஸ்' என்று அழைக்கப்படும் கடற்கரை சுற்றுலாவுக்கு ரோமானியர்களே அடிப்படை.
சுற்றுலா வளர்ச்சி :

இடைக்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்தவமும், வளைகுடா நாடுகளில் இஸ்லாமும் பரவியது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் வசித்த மக்கள் கிறிஸ்தவ சமயத்தின் புனித இடங்களான பெத்லகேம், ஜெருசலத்திற்கு பயணம் மேற்கொண்டனர். இதனால் மேற்கத்திய கலாசாரம் கிழக்கிந்திய பகுதிகளில் பரவ ஆரம்பித்தது. இஸ்லாமிய மக்கள், மெக்கா நோக்கி புனித பயணம் மேற்கொண்டனர். பயணங்கள் நாட்டின் மொழி, இலக்கியம், இசை, நடனம், கட்டடம், இயற்கை, கலாசாரம் பற்றிய பதிவுகளை உலக மக்களிடம் பரப்பியது. இதுவே சுற்றுலா வளர்ச்சிக்கான காரணி.
நவீன சுற்றுலா :

18 ம் நுாற்றாண்டில் இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சி பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. தொழில் திறனை வளர்க்கவும், வணிகம் செய்யவும் மன மகிழ்ச்சிக்காகவும் பணக்காரர்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு 'இன்ப சுற்றுலா' சென்றனர். நீண்ட நேர உழைப்பு, இயந்திரங்களின் இரைச்சல், அசுத்தமான நகரங்கள், நச்சு காற்று, மக்கள் தொகை பெருக்கத்தால் இடநெருக்கடி, சுகாதாரமற்ற சுற்றுப்புறம் போன்ற தொழில்புரட்சியின் கேடுகள் தொழிலாளர்களை அமைதியான இயற்கை சூழலை நோக்கி நகர்த்தியது. இதனால் புத்துணர்வு பெற்று, தொழிலாளர்களின் வேலைத்திறன் அதிகரித்ததை அறிந்த நிறுவனங்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளித்து, தொழிலாளர்களை சுற்றுலாவுக்கு அனுப்பின.
சுற்றுலாவின் தந்தை:

1814ல் தாமஸ் குக் என்பவர் இங்கிலாந்தின் லாபரோ என்ற நகரில் இருந்து லீசெஸ்டர் வரை 570 நபர்களுடன் ரயில் பயணம் சென்றார். இதுவே உலகின் முதல் விளம்பரப்படுத்தப்பட்ட தொழில்முறை சுற்றுலா. இப்பயணம் வெற்றிகரமாக இருந்ததால் பல சுற்றுலா பயணங்களை தாமஸ்குக் ஏற்பாடு செய்தார். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பயணிகளை இன்ப சுற்றுலாவிற்கு அழைத்து சென்றதால் தாமஸ் குக் 'சுற்றுலாவின் தந்தை' என்றும் 'உலகின் முதல் பயண முகவர்' என்றும் கருதப்படுகிறார். தற்போது உலக நாடுகள் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அன்னிய செலாவணியை குவிக்கிறது. இதுவரை போர் சத்தங்களை கேட்டி ராத சுவிட்சர்லாந்தின் முதன்மை வருவாயே சுற்றுலா தான்.
புகையற்ற தொழிற்சாலை:

நாட்டின் சுற்றுலா துறையை மேம்படுத்துவதன் மூலம் அந்நாட்டின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுகிறது. இதனால், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் தொழிற்துறையாக சுற்றுலா மாறுகிறது. எனவே சுற்றுலா துறையை 'புகையற்ற தொழிற்சாலை' என அழைக்கின்றனர்.
இந்திய சுற்றுலா:

பரந்த பாலைவனமும், அழகு நீலக்கடல்களும், வானுயர்ந்த பனி மலைகளும் பசுமை மாறாக் காடுகளும், பள்ளத்தாக்குகளும், பக்தி மணம் பரப்பும் ஆன்மிக தலங்களும்... ஏன் பல இனக்குழுக்களும் கொண்ட நாடு இந்தியா. எனவே இந்தியா, சுற்றுலாவில் முன்னணி வகிப்பதில் ஆச்சரியமில்லை. 'உலக புவியியலாளர்களின் சொர்க்கம்' என வர்ணிக்கப்படும் மன்னார் வளைகுடா, பசுமையான இமயமலை சிகரங்கள், இயற்கை ஆர்வலர்களையும் பல்லுயிரின ஆராய்ச்சியாளர்களையும் பெருமளவில் ஈர்க்கிறது. கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் பாரம்பரிய கட்டடங்களும், கலாசாரத்தின் அடையாளங்களை காட்டும் இசையும், நடனமும், கண்ணாடியாக மிளிரும் ஓவியங்களும், நவீன பொறியாளர்கள் வியக்கும் சிற்பங்களும் உலக மக்களை இந்தியா நோக்கி பயணப்பட தூண்டுகிறது.
சுற்றுலா அவசியம்:

'பொங்கிவரும் கடல் அலைகளும், மலை முகடுகளின் ஊடே வந்து நம்மை தழுவி செல்லும் மேகக் கூட்டமும் இதமான தென்றல் காற்றும், மனிதனின் கோபம், கவலை, மன அழுத்தம் ஆகியவற்றை தன்னுள் இழுத்து செல்லும் ஆற்றல் கொண்டவை' என கூறுகிறார்கள் உளவியல் நிபுணர்கள். எனவே தான் சோர்வுற்ற மனித மனங்கள் அந்த இடம் நோக்கி பயணிக்கின்றன. புத்தகப் புழுவாய் புரண்டு கொண்டிருக்கும் இன்றைய மாணவர்களுக்கு ஆசிரியர்களை விட சுற்றுலா பயணங்களே நடைமுறை அறிவை தரும். "அறிவை விரிவு செய், அகண்டமாக்கு..." என்றார் பாரதிதாசன். அத்தகைய விசாலமான அறிவை பெற ஒரே வழி, அர்த்தமுள்ள சுற்றுலா பயணங்களே!

- முனைவர் சி.செல்லப்பாண்டியன்,
உதவி பேராசிரியர்,
தேவாங்கர் கலை கல்லூரி,
அருப்புக்கோட்டை. 78108 41550

Comments