18 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள சூர்யா!

Surya enters in 18th year in Cinemaமணிரத்னத்தின் தயாரிப்பில் விஜய்யுடன் இணைந்து சூர்யா நடித்த முதல் படம் நேருக்கு நேர் 1997ஆம் செப்டம்பர் 6ஆம் தேதி வெளிவந்தது. அந்த வகையில் நடிகர் சூர்யா சினிமாவுக்கு வந்து நேற்றோடு 17 வருடங்கள் முடிந்து, இன்று 18 ஆவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார். சிவகுமாரின் மகனான சரவணனை, சூர்யாவாக மாற்றி நேருக்கு நேர் படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் வஸந்த். நடிகரின் மகனாக இருந்தாலும், நடிப்பில் தேர்ச்சியடையாதவராக இருந்த சூர்யா, நந்தா, பிதாமகன்,மௌனம் பேசியதே ஆகிய படங்களில் நடித்த பிறகு மிகப்பெரிய நடிகராக உருவெடுத்தார்.

காக்க காக்க, வாரணம் ஆயிரம் ஆகிய படங்களும் வெற்றியடைந்து சூர்யாவை மேலும் உயரத்துக்குக் கொண்டுபோனது. ஹரியின் இயக்கத்தில் வெளிவந்த படங்களான ஆறு, வேல், சிங்கம், சிங்கம்2 ஆகிய சூர்யாவுக்குள் இருந்த ஆக்ஷன் ஹீரோவை அடையாளம் காட்டின. இந்தப் படங்கள் மட்டுமின்றி கே.வி.ஆனந்தின் அயன், ஏ.ஆர்.முருகதாஸின் கஜினி போன்ற சூப்பர்ஹிட் படங்களும் சூர்யாவை உச்சத்துக்கொண்டு போயின.

பேரழகன் படத்தில் கூன் விழுந்த மனிதனாக, கஜினியில் மொட்டைத்தலை மறதி வியாதிக்காரராக, வாரணம் ஆயிரம் படத்தில் சிக்ஸ்பேக் இளைஞராகவும், 65 வயது முதியவராகவும், ஏழாம் அறிவு படத்தில் போதி தர்மராக, மாற்றான் படத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையராக என சூர்யா போட்ட கெட்-அப்கள் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின.

அதுமட்டுமல்ல, படத்துக்குப் படம் கெட்-அப் மாற்றி நடிப்பதில் கமலுக்குப் பிறகு சூர்யாதான் என்ற இமேஜையும் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. 17 வருடங்களில் சூர்யா நடித்திருப்பது வெறும் 30 படங்கள்தான். ஆனால் 30 படங்களில் வெரைட்டியும் வித்தியாசமும் விரவிக்கிடக்கின்றன. அதுதான் சூர்யாவை இன்னும் ரசிக்க வைக்கிறது.

Comments