அதிமுகவினர் தொடர் ரகளை - தூத்துக்குடியில் 10 பஸ்கள் மீது சராமரி தாக்குதல்

அதிமுகவினர் தொடர் ரகளை - தூத்துக்குடியில் 10 பஸ்கள் மீது சராமரி தாக்குதல்தூத்துக்குடி: சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பை அடுத்து அதி்முகவினர் ரயில் மறியல், கொடும்பாவி எரிப்பு போன்ற தொடர் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, தூத்துக்குடியில் அதிமுகவினரின் தாக்குதலில் சுமார் பத்திற்கும் அதிகமான பேருந்துகள் பலத்த சேதமடைந்தன. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடியில் அதிமுகவினர் பழைய பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர். திடீரென அதிமுகவினர் உருவபொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் பழைய பேருந்து நிலையம் முதல் குரூஸ் பர்னாந்து சிலை வரை ஊர்வலமாக சென்று கடைகளை அடைக்குமாறு வியாபாரிகளை வற்புறுத்தினர். அங்கு சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே மேயர் அந்தோணி கிரேஸ் தலைமையில் ஊர்வலமாக வந்த அதிமுகவினர் சிலர் பழைய பேருந்து நிலையம் அருகே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சுரமணியசுவாமி, கருணாநிதி ஆகியோரின் படங்களை அவர்கள் தீ வைத்து எரித்தனர். அதிமுகவினர் போராட்டம் காரணமாக தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் போக்குவரத்து முடங்கியது. இதனால், பேருந்திற்காகக்க் காத்திருந்த ஏராளமான பொதுமக்கள் பெரும் தவிப்பிற்கு உள்ளானார்கள். அப்போது, பேருந்து நிலையத்துக்கு வந்த திருநெல்வேலி, திருசெந்தூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அரசு பஸ்களை சிலர் கல்வீசித் தாக்கினர். இதனால், அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதனால் உடனடியாக பேருந்துகளை பணிமனைக்கு திரும்புமாறு போலீசார் அறிவுறுத்தினர். இந்த வன்முறையை போலீசார் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக பொதுமக்களும், வியாபாரிகளும் அதிர்ச்சியுடன் தெரிவித்தனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாநகர செயலாளர் ஏசாதுரை தலைமையிலான அதிமுகவினர் ஊர்வலமாக எட்டயபுரம் ரோட்டில் வந்தனர். அப்போது அங்கு திறந்திருந்த புரோட்டா கடையை அவர்கள் அடித்து நொறுக்கினர். இதில் அக்கடையின் உரிமையாளர் பாலசுப்பிரமணியன என்பவர் காயம் அடைந்தார். இது போல் தேவர்புரம் ரோட்டில் உள்ள பெண்கள் பள்ளியை அடுத்த பழக்கடையையும் அதிமுகவினர் அடித்து நொறுக்கினர். இன்று காலை வரை பெரும்பாலான பஸ்கள் இயங்கவில்லை. குறிப்பாக வெளியூர் செல்லும் பஸ்கள் இயங்கவில்லை. பின்னர் இன்று காலை முதல் பேருந்துகள் ஓடத் தொடங்கியதால், அங்கு இயல்பு வாழ்க்கைத் திரும்பத் தொடங்கியுள்ளது.

Comments