இலங்கை தூதரகத்தை இழுத்து மூடுங்கள்! - ஆர்ப்பாட்டத்தில் குதிக்கும் திரையுலகினர்

இலங்கை தூதரகத்தை இழுத்து மூடுங்கள்! - ஆர்ப்பாட்டத்தில் குதிக்கும் திரையுலகினர் தமிழக முதல்வரை அவமதித்த இலங்கையின் துணைத் தூதரகத்தை இழுத்து மூடக் கோரி தமிழ் திரையுலகினர் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி போராட்டத்தில் குதிக்கின்றனர். தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் முன்னெடுக்கும் இந்தப் போராட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் நடிகைகள், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்கின்றனர். திரளாகப் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர்கள் சங்கத்தினர் இந்தப் போராட்ட அறிவிப்பினை வெளியிட்டனர். அதில், "தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பவரான நமது தமிழக முதல்வரை இலங்கை அரசு உள்நோக்கத்துடன் ஆபாசமாகச் சித்தரித்து அவமானப்படுத்தியுள்ளது. எல்லா பாதிப்புகளையும் ஏற்படுத்திவிட்டு இப்போது நிபந்தனையற்ற மன்னிப்பு எனும் போர்வைக்குள் ஒளிந்து கொள்ளப் பார்க்கிறது. இப்போது மட்டுமல்ல, முதல்வர் அம்மா அவர்கள், எப்போதெல்லாம் ஈழத் தமிழர்களின் வாழ்வைப் பாதுகாக்க போராடுகிறார்களோ, அப்போதெல்லாம் அதைக் குற்றம் சாட்டுவதையோ அல்லது கொச்சைப்படுத்துவதையோ வழக்கமாக வைத்துள்ளது. தொடர்ந்து தமிழர்களின் உணர்வுகளைப் புறக்கணிப்பதோடு, நமது மாண்புமிகு முதல்வரையும் அவமானப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ளும் இலங்கையின் ஒட்டு வாலாக விளங்கும் இலங்கை துணைத் தூதரகம் தமிழகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். இந்த துணைத் தூதரகத்தை உடனடியாக மூடக் கோரி, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கமும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் சென்னையில் உள்ள அந்த தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்யவிருக்கிறோம். இதில் தமிழ் திரைப்படத் துறையில் உள்ள அனைத்து பிரிவைச் சேர்ந்த நடிகர் நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொள்கிறார்கள். திங்கள் கிழமை காலை 10 மணிக்கு நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம். -இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

Comments