மகாத்மா காந்தி வழியில் கர்நாடகா : சுதந்திர தின விழாவில் முதல்வர் பெருமிதம்

பெங்களூரு : பெங்களூரு, மானக் ஷா பரேடு மைதானத்தில் நடந்த, சுதந்திர தின விழாவில், முதல்வர் சித்தராமையா, தேசிய கொடி ஏற்றினார்.

விழாவில், அவர் பேசியதாவது: இந்த சுதந்திர தினம், சமூக மற்றும் பொருளாதார சுதந்திரத்துடன், அரசியல் சுதந்திரத்தையும் அளித்து, ஏழைகளுக்கு உதவும் வகையில் அமையும் என, நம்புகிறேன்.
'நள்ளிரவில், ஒரு பெண் சுதந்திரமாக நடமாடும் நிலை ஏற்படுமானால், அன்று தான், இந்தியா சுதந்திரம் அடைந்ததாக கருத முடியும்' என, தேசப்பிதா மகாத்மா காந்தி சொன்னது போன்று, அவருடைய வழியில், கர்நாடகா வளர்ச்சி, வறுமையின்மை, கல்வி, சுகாதாரம் போன்றவைகளில், முன்னேற்றம் கண்டு வருகிறது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், 165 வாக்குறுதிகளை அளித்தது; அதில், 95 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கர்நாடகாவை வறுமையற்ற மாநிலமாக மாற்றவும், ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளுக்கு உணவளித்து, பல்வேறு சுகாதார திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது. விவசாய துறையிலும், விவசாயிகளுக்கு பயன்படும் வகையில், ஆதரவு விலை அறிவிக்கப்படுவதோடு, தண்ணீருக்கான மாநில உரிமையையும் பாதுகாத்து வருகிறது. குழந்தைகள் தான், நம் தேசத்தின் எதிர்காலம். அவர்களை பாதுகாப்பதற்காக, சிரபாக்யா, மதிய உணவு திட்டம், உறைவிட பள்ளிகளை அரசு அளித்து வருகிறது.

விவசாய துறை : விவசாயிகள், இயற்கையை கடவுளாக கருதுகின்றனர். அவர்களுக்கு, பயிர் கடனாக, வட்டியின்றி, மூன்று லட்சம் ரூபாய் வரை கடனுதவி அளிக்கப்படுகிறது. 23 மாவட்டங்களில், வறண்ட நிலையிலுள்ள, ஐந்து முக்கிய மண்டலங்களில், கிருசி பாக்யா திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறைந்த கால பயிர்கடன் வாங்கும் விவசாயிகளுக்கு, ஒரு சதவீத வட்டியில், ஒரு லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்படுகிறது. 2013 - 14ல் கரும்பு விவசாயிகளுக்கு, ஒரு மெட்ரிக் டன் கரும்பு உற்பத்திக்கு, 150 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது.

ஊரக வளர்ச்சி : மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ஊரக வளர்ச்சிக்காக, பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கிராம பகுதிகளில் சுத்தமான குடிநீருக்காக, 1,000 யூனிட்களை அமைக்கும் திட்டத்தில், இதுவரை, 300 யூனிட்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மாநிலம் முழுவதும், 5.05 லட்சம் தனிப்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதை சமூக ஆய்வு துறை உறுதிபடுத்தியுள்ளது. நிர்மல் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பமும், கழிப்பறையுடன் கூடிய குளியலறை அமைத்து கொள்ள, 2,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. ஜலதாரா குடிநீர் வினியோக திட்டத்தின் கீழ், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட, எஸ்.சி., - எஸ்.டி., குடும்பத்தினர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சுகாதாரம் : அனைத்து பகுதிகளிலும், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக, யசஸ்வினி சுகாதார காப்பீட்டு திட்டம் நகர பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தேசியளவில், முதன் முறையாக, ராஜிவ்காந்தி ஆரோக்கிய பாக்யா திட்டம் அமல்படுத்தப்பட்டு, பெரிய மருத்துவமனைகளில் மருத்துவ உதவி பெறுவதன் மூலம், நான்கு கோடி ஏழை மக்கள் பயனடைந்து வருகின்றனர். ஊட்டச்சத்து குறைவான குழந்தைகள் ஆரோக்கியத்துக்காக, பாகல்கோட்டை, பிஜாப்பூர் மாவட்ட அங்கன்வாடியில், 'ஆயுஷ் புஷ்டி' சத்துகள் அடங்கிய பிஸ்கெட்டுகள் வழங்குவதை, மேலும், 10 பின் தங்கிய மாவட்டங்களிலும் விரிவுபடுத்தவுள்ளோம். அரசு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில், விபத்துகளுக்காக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நபர்களுக்கு, முதல்வர் நிதியுதவியிலிருந்து, 25 ரூபாய் வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும், 150 எம்.பி.பி.எஸ்., சீட்டுகள் கொண்ட மருத்துவ கல்லூரிகளை அமைக்க, அரசு திட்டமிட்டு உள்ளது. இவ்வாறு, முதல்வர் பேசினார்.

Comments