ஈராக் இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்புவர்:மத்திய அமைச்சர் சுஷ்மா உறுதி

புதுடில்லி:''ஈராக்கில், பயங்கரவாதிகளின் பிடியில் உள்ளவர்கள் உட்பட, அனைத்து இந்தியர்களும், பத்திரமாக நாடு திரும்புவது உறுதி செய்யப்படும்,'' என, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

ஈராக்கின் மொசூல் நகரில், இந்தியர்கள், 41 பேர், பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கி உள்ளனர்.
இது தொடர்பாக, ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த தியாகி, நேற்று, ராஜ்யசபாவில், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.இதற்கு பதில் அளித்த, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது:ஈராக்கில் உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்துள்ளதும், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் தாக்குதலால், அங்கு நிலைமை மோசமடைந்து வருவதும், மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. இருப்பினும், ஈராக்கில் தற்போதுள்ள, ஒவ்வொரு இந்தியருக்கும் தேவையான உதவிகளை, மத்திய அரசு செய்து வருகிறது. அவர்கள் பத்திரமாக நாடு திரும்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஈராக்கின் மொசூல் நகரில், பயங்கரவாதிகள் பிடியில் உள்ள, 41 பேர் உட்பட, அனைத்து இந்தியர்களும், பாதுகாப்பாக நாடு திரும்புவதை, மத்திய அரசு உறுதி செய்யும். அதற்காக, சாத்தியமான அனைத்து வழிகளிலும், முயற்சி மேற்கொள்ளப்படும்.ஈராக்கில் உள்நாட்டுப் போர் துவங்கியது முதல், அங்குள்ள நிலவரங்களை, மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. அத்துடன், ஈராக் செல்லும் இந்தியர்களுக்காக, அவ்வப்போது, எச்சரிக்கை அறிவிப்புகளும் வெளியிடப்படுகின்றன.

ஈராக் பயணத்தை தவிர்க்கும்படி, இந்தியர்கள் அனைவரையும், மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஈராக் செல்வோருக்கு, குடியேற்றத் துறை அனுமதி வழங்குவதையும், வெளிநாட்டு இந்தியர் விவகாரத் துறை நிறுத்தி வைத்துள்ளது.ஈராக்கில், இந்தியர்கள் இருந்தனர். அவர்களில், ஒரு பிரிவினர் மட்டுமே, சண்டை நடக்கும் பகுதியில் சிக்கி உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Comments