காசாவில் நிலைமை மிகவும் மோசம் : உணவு, மருந்துக்கு கடும் தட்டுப்பாடு

ஐக்கிய நாடுகள் ;ஜூலை 8 முதல், பாலஸ்தீனத்தின் காசா நீரிணை பகுதியில், இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் கர்ணகடூர தாக்குதலால் படுகாயம் அடைந்த, 9,000 பேர் மற்றும் அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள, 1.8 லட்சம் பேருக்கு, போதிய உணவு மற்றும் மருத்துவ வசதி கள் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதால், அவர்கள் நிலை மிகவும் மோசமாகியுள்ளதாக, ஐ.நா., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஜூலை ௮ முதல் தாக்குதல்அண்டை நாடான இஸ்ரேலைச் சேர்ந்த, மூன்று யூதச் சிறுவர்களை, காசா பகுதியை தங்கள் வசம் வைத்துள்ள, 'ஹமாஸ்' பயங்கரவாதிகள், கடந்த மாதத் துவக்கத்தில் கொடூரமாக கொன்றனர். அதை அறிந்த இஸ்ரேல் ராணுவம், ஜூலை 8 முதல், காசா பகுதியில் விமான தாக்குதல் மற்றும் தரைவழி தாக்குதலை நடத்தி வருகிறது.

இதில், 1,676 பாலஸ்தீனியர் கொல்லப்பட்டுள்ளனர்; 9,000 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். குண்டு வீச்சில் வீடுகளை இழந்த, 1.8 லட்சம் பேர், ஐ.நா., கட்டுப்பாட்டில், அகதிகள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். குண்டு வீச்சுக்குப் பயந்து, வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல், 4.6 லட்சம் பேர் வீடுகளின் அடித்தளங்களில் முடங்கியுள்ளனர். ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலில், இரண்டு இந்திய யூதர்கள் உட்பட, 63 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காசா பகுதியில் உள்ள பள்ளிகள் மற்றும் சமூக கூடங்களில், கூட்டம் கூட்ட மாக மக்கள் புகுந்துள்ளனர். இதனால், அந்த பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்பட்டு உள்ளது. நிரம்பி வழியும் மருத்துவமனைஅவர்களுடன், ஐ.நா., கட்டுப்பாட்டில் உள்ள, அல் - ஷீபா மருத்துவமனையில், கொள்ளளவையும் தாண்டி கூடுதலாக ஆயிரக்கணக்கில், குண்டுவீச்சில் படுகாயம் அடைந்தவர்களும், பிற நோயாளிகளும் சேர்ந்துள்ளதால், மருந்து, உணவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, போர்க்கள பாதிப்பை உணர்த்துகிறது.

'எங்களால் முடிந்த அளவுக்கு, மருத்துவ உதவி மற்றும் உணவு வழங்கி வருகிறோம். இருப்பு உடனுக்குடன் தீர்ந்து விடுகிறது. கூடுதல் நிதி ஒதுக்குமாறு, ஐ.நா., சபையிடம் கேட்டுள்ளோம்' என, காசா பகுதியில் உள்ள, ஐ.நா., அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.சண்டை தொடர்ந்து வருவதால், பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என, அஞ்சப்படுகிறது. நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில், 30 பாலஸ்தீனியர் கொல்லப்பட்டதை அடுத்து, பலி எண்ணிக்கை, 1,700ஐ தாண்டியது.

Comments