பி.எஸ்.என்.எல்.,ஐ காப்போம்: அமைச்சர் ரவிசங்கர் அறிவிப்பு

புதுடில்லி: ''பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தை சாக விடமாட்டோம்; அதை புத்துயிர் பெற வைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்,'' என, ராஜ்யசபாவில், தொலைத் தொடர்புத்துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:கடந்த 2000த்தில் துவக்கப்பட்ட, அரசுக்கு சொந்தமான, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், மோசமான நிதி நிலைமையால், போட்டியை சமாளிக்க முடியாமல் தள்ளாடுகிறது.
போதுமான உள்கட்டமைப்பு வசதிகளுக்காக, முந்தைய ஆண்டுகளில் நிதி ஒதுக்கப்படாததே இதற்கு காரணம். இந்த நிறுவனத்தின் முந்தைய பெருமையை மீட்டுக் கொண்டு வருவோம். சாக அனுமதிக்க மாட்டோம். 

தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொண்டு, இந்த நிறுவனத்திற்கு புத்துயிர் ஊட்டுவோம்.பிற தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு சாதகமாக, பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளில் சிலர் செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. அதுகுறித்து கண்காணித்து வருகிறோம்.இவ்வாறு அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

Comments