தஞ்சாவூர்: கும்பகோணம் பள்ளி தீ விபத்தில், 94 குழந்தைகள் பலியான வழக்கு
விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில்,
நாளை, தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், காசிராமன் தெருவில், கிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப் பள்ளி, சரஸ்வதி வித்யாசாலா, கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளி ஆகியவை செயல்பட்டு வந்தன.
இதில், கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில், 2004 ஜூலை, 16ம் தேதி
ஏற்பட்ட தீ விபத்தில், 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தன; மேலும், 18
குழந்தைகள் பலத்த காயமடைந்தன.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், காசிராமன் தெருவில், கிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப் பள்ளி, சரஸ்வதி வித்யாசாலா, கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளி ஆகியவை செயல்பட்டு வந்தன.
24 பேர்:
இது
தொடர்பாக, கும்பகோணம் கிழக்கு போலீசார், விசாரணை நடத்தினர். பள்ளி
நிறுவனர் பழனிசாமி, இவரது மனைவியும், பள்ளித் தாளாளருமான சரஸ்வதி,
கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு
அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையலர் வசந்தி, அப்போதைய முதன்மைக் கல்வி அலுவலர்
பழனிசாமி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் பழனிசாமி, பாலாஜி, மாவட்ட
கல்வி அலுவலர் நாராயணசாமி, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள்
ராதாகிருஷ்ணன், பாலசுப்ரமணியம் (மழலையர் பள்ளிகள்), கூடுதல் உதவித்
தொடக்கக் கல்வி அலுவலர்கள் பாலகிருஷ்ணன், மாதவன், தாசில்தார் பரமசிவம்,
பொறியாளர் ஜெயசந்திரன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக உதவியாளர்
சிவபிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின்
நேர்முக உதவியாளர் துரைராஜ், வகுப்பு ஆசிரியர்கள் தேவி, மகாலட்சுமி,
அந்தோணியம்மாள், கும்பகோணம் நகராட்சி கமிஷனர் சத்தியமூர்த்தி, நகரமைப்பு
அலுவலர் முருகன், தொடக்கப்பள்ளி கல்வி இயக்குனர் கண்ணன் ஆகிய, 24 பேரை
கைது செய்தனர்.இதில், கிருஷ்ணா பெண்கள் பள்ளித் தலைமையாசிரியர் பிரபாகரன்,
அப்ரூவராக மாறினார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக, வழக்கறிஞர்கள் ஆஜராக
முன்வராததால், வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும்,
கும்பகோணம் நீதிமன்றத்தில், 2005ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்யப்பட்டு, 2006ல் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, அதன் நகல்
வழங்கப்பட்டது. 488 பேர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டு, 3,126
பக்கங்களுக்கு குற்றப் பத்திரிகையும், 60 ஆவணங்களும் நீதிமன்றத்தில்
தாக்கல் செய்யப்பட்டது.விசாரணையின் போது, பிரச்னை ஏற்படுவதைத்
தவிர்க்கவும், வழக்கை விரைவாக விசாரித்து, தீர்ப்பு வழங்குவதற்காகவும்,
தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு, 2007ல் இந்த வழக்கு மாற்றம்
செய்யப்பட்டது. தொடர்ந்து, தஞ்சாவூர் விரைவு நீதிமன்றத்துக்கும், சில
மாதங்களுக்கு பின், மாவட்ட குடிமையியல் நீதிமன்றத்துக்கும் மாற்றப்பட்டு,
மீண்டும் மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கே மாற்றப்பட்டது.
விடுவிப்பு:
இந்த
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்போதைய முதன்மைக் கல்வி அலுவலர் பழனிசாமி,
தாசில்தார் பரமசிவம், தொடக்கப்பள்ளி இயக்குனர் கண்ணன் ஆகியோர், உயர்
நீதிமன்றத்தால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதனிடையே, வழக்கில்
குற்றம் சாட்டப்பட்ட, பாலகிருஷ்ணன் தன்னையும் விடுவிக்குமாறு, உச்ச
நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நிராகரித்த உச்ச
நீதிமன்றம், வழக்கு விசாரணையை, ஆறு மாதங்களுக்குள் முடித்து தீர்ப்பு வழங்க
வேண்டும் என, 2012ல் உத்தரவிட்டது. விபத்து நிகழ்ந்து, எட்டு
ஆண்டுகளுக்குப் பின், தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், 2012ம்
ஆண்டு செப்., 24ம் தேதி, விசாரணை துவங்கியது. இதில், அரசுத் தரப்பில்
வழக்கறிஞர் மதுசூதனன் வாதாடினார். இந்த வழக்கில், அப்ரூவரான பிரபாகரன்,
விபத்தில் காயமடைந்த, 18 குழந்தைகள், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்,
முன்னாள் மாவட்ட கலெக்டர் ராதாகிருஷ்ணன், பள்ளிக் கல்வி இயக்குனர்கள்
வசுந்தராதேவி, ராமேஸ்வர முருகன், டி.ஐ.ஜி., ஜான் நிக்கல்சன், உயிரிழந்த
குழந்தைகளை பரிசோதனை செய்த, 18 டாக்டர்கள் என, மொத்தம், 230 பேர் சாட்சியம்
அளித்தனர். சாட்சி விசாரணை, கடந்த மார்ச், 28ம் தேதி முடிவடைந்தது.இதைத்
தொடர்ந்து, அரசுத் தரப்பில் கூறப்பட்ட சாட்சியங்கள் குறித்து, குற்றம்
சாட்டப்பட்டவர்களிடம் கேட்கப்பட்டது.
ஜூலை 31க்குள்...:
பின்,
எதிர் தரப்பு வழக்கறிஞர், அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதம் நடந்தது.
இதற்கிடையில், வழக்கு விசாரணையை ஜூலை, 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்
என, உச்ச நீதிமன்றம் மே, 5ம் தேதி உத்தரவிட்டது. பல்வேறு இழுபறியுடன், 22
மாதம் நடந்து வந்த வழக்கு விசாரணை, 17ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து,
இந்த வழக்கின் தீர்ப்பு, ஜூலை, 30ம் தேதி வழங்கப்படும் என, நீதிபதி முகமது
அலி தெரிவித்தார்.
Comments