தைவானிலுள்ள கோசியுங்கிலிருந்து மாகுங்
பகுதிக்கு ஏ.டி.ஆர்.-72 ரக பயணிகள் விமானம் ஒன்று 54 பயணிகளுடன் நேற்று
மாலை 5.43 மணிக்கு புறப்பட்டுள்ளது. 4 மணிக்கே புறப்பட வேண்டிய அந்த
விமானம் மோசமான வானிலை காரணமாக தாமதமாக புறப்பட்டு சென்றுள்ளது.
ஆனால்,
தொடர்ந்து வானிலை சரியில்லாத காரணத்தால் அந்த விமானம் சென்றடைய வேண்டிய
மாகுங் நகரில் தரையிறங்க முடியவில்லை. எனவே, விமான அதிகாரிகள் 7.06 மணி வரை
காத்திருக்குமாறு விமானியிடம் கூறியிருக்கிறார்.
இதையடுத்து, விமானியும் சிறிது நேரத்திற்கு பிறகு விமானத்தை தரையிறக்க
முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அவரது முதல் முயற்சி தோல்வியில்
முடிந்தது. இதையடுத்து, 2-வது முறையாக தரையிறங்க அதிகாரிகளிடம் அனுமதி
கேட்டுள்ளார். ஆனால், அதற்குள் விமானியுடனான தகவல் தொடர்பு
துண்டிக்கப்பட்டுவிட்டது.
அதன்பிறகு கிடைத்த தகவலில், அந்த விமானம்
பெங்கு தீவிலுள்ள ஹூஷி குடியிருப்பு பகுதியில் தரையில் விழுந்து நொறுங்கி
விபத்துக்குள்ளானது தெரிய வந்தது. இதில், 2 வீடுகளும் சேதமடைந்து
தீப்பிடித்தன.
முதற்கட்ட விசாரணையில், விமானம் பெங்கு தீவிற்கு மேல்
பறந்து கொண்டிருந்தபோது கடுமையான மழையும், மோசமான காற்றும் வீசியதால்
விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று தெரிவிக்கிறது. இதில் 51 பேர்
பலியாகியுள்தாகவும், 8 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் நிகழ்ந்துள்ள 2-வது
மிகப்பெரிய விமான விபத்தாகும். கடந்த 17ஆம் தேதி நெதர்லாந்து தலைநகர்
ஆம்ஸ்டர்டாமில் இருந்து 298 பேருடன் புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ்
விமானம், உக்ரைனில் கிழக்கு பகுதியில் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதில்
அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அந்த சோகம்
மறைவதற்குள் இந்த விபத்து நடைபெற்றுள்ளது அதிர்ச்சி அலைகளை
உருவாக்கியுள்ளது.
Comments