தமிழக முதலமைச்சராவது இரண்டாம் பட்சம்தான் : தூத்துக்குடியில் விஜயகாந்த் பேச்சு

தூத்துக்குடி:தமிழக மக்களுக்கு நல்லது செய்வது தான் முதல்பட்சம், விஜயகாந்த் முதலமைச்சராவது இரண்டாம் பட்சம் தான், என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தூத்துக்குடியில் பேசினார்.

வேலை வாய்ப்பு இல்லை: செல்வநாயகபுரம் ரோட்டில் ம.தி.மு.க., வேட்பாளர் ஜோயலை ஆதரித்து விஜயகாந்த் பேசியதாவது: தூத்துக்குடி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும்.
இங்கு மீனவர்கள், கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிலாளர்கள், உப்பள தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். ஆனால் இங்கு வேலை வாயப்பு இல்லாமல் தொழிலாளர்கள் வெளிமாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் இல்லை: அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் இங்குள்ளது. தமிழகத்தின் பல பகுதியில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். அங்கு அடிப்படை வசதிகளான குடி நீர், கழிப்பிட வசதிகள் இல்லை.

மக்களுக்கு பாதுகாப்பு இல்லை : தமிழகத்தில் முதல்வர் "ஜெக்கு மட்டுமே போலீசார் பாதுகாப்பு வழங்குகின்றனர். 10 கி.மீ., தூரத்திற்கு போலீஸ், 5 கி.மீ., தூரத்திற்கு சீல் வைக்கப்படுகிறது. இவர்களுக்கு சம்பளம் முதல்வர் பையில் இருந்தா கொடுக்கிறார். மக்களின் வரிப்பணத்தில் தான் போலீசாருக்கு சம்பளம் கொடுக்கிறார். அவருக்கு மட்டுமே பாதுகாப்பு. பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து கிடக்கிறது.

செய்வீர்களா, செய்வீர்களா: இரு ஆண்டுகளுக்கு முன்பு சங்கரன் கோவில் இடைத்தேர்தலுக்கு வந்தார். மக்களை பார்த்து செய்வீர்களா, செய்வீர்களா, என கேள்வி எழுப்பினார். நீங்களும் இன்று கேள்வி எழுப்புங்கள் குடி நீர் கொடுப்பீர்களா, மின்சாரம் கொடுப்பீர்களா,என கேளுங்கள். நான் உங்களிடம் கேட்கிறேன் ஜெயலலிதாவை வீட்டுக்கு அனுப்புவீர்களா.

ஏழையை பணக்காரர்கள் ஆக்க வேண்டும்: மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.வேலை வாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள், வெளி நாட்டிற்கும், கேரள மாநிலத்திற்கும் செல்கின்றனர். ஆடு மாடு மேயப்பவர்கள் வாழ்க்கையில் முன்னேற கூடாதா? மக்களே சிந்தித்து மாற்றி ஓட்டு போட வேண்டும். பணக்காரர்களுக்கு சாதகமான ஆட்சி நடந்து வருகிறது. பணக்காரர்களுக்கு நான் எதிரியில்லை. ஏழைகள் பணக்காாரர்கள் ஆக்க வேண்டும், என்பதே என் ஆசை. தங்க தட்டில் வைத்தால் நான் ஏன் கட்சிக்கு வருகிறேன்: தமிழக மக்களுக்கு தங்க தட்டில் வைத்து பார்க்க வேண்டும். அப்படி பார்த்தான் நான் ஏன் கட்சி துவங்க போகிறேன். நான் நடித்துக்கொண்டே இருந்திருப்பேன். தி.மு.க., அ.தி.மு.க., இரு கட்சிகளுமே ஊழல் கட்சிதான். இருவரும் கல்லாவில் போட்டுக்கொண்டே இருக்கின்றனர்.

டாஸ்மாக்கால் பெண்களுக்கு பாதிப்பு: இன்று தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் டாஸ்மாக் கடைகள். டாஸ்மாக் மட்டுமே டார்கெட், மக்கள் வாழக்கை தரத்திற்கு டார்கெட் வைக்க வேண்டியது தானே. பெண்கள் மிகவம் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் தெய்வங்கள். பிறந்த வீடு, புகுந்த வீட்டிலும் பாதுகாக்குகின்ற சக்திகள். சக்தியும், சிவனும் சேர்ந்து சிவசக்தியாக திகழ்கின்றனர்.

சின்ன கட்சியார்?: எங்களை பார்த்து சின்ன கட்சிகள் என்கின்றனர். சின்ன கட்சிகளுக்கு ஓட்டு போடாதீர்கள் என்கின்றனர். 2000-4 நிலை மீண்டும் வரும். அன்று அ.தி.மு.க., ஒரு இடத்தில் கூட ஜெயிக்கவில்லை. அப்போது சின்ன கட்சி யார்? அந்த நிலை மீண்டும் திரும்பும். வட்டத்தில் இருந்து அமைச்சர் வரை மிக்சி, கிரைண்டர், ஆடு, மாடு வழங்க ரேட் வைத்து வாங்குகின்றனர். கொட்டோ கொட்டு என்று நன்மைகள் கொட்டுமாம். கட்டோ கட்டு என்று கட்டுங்கள். இரவு வீட்டில் படுத்தால் 12 மணிக்கு உடம்பெல்லாம் வியர்வை எழுந்து பார்த்தால் டொக், டொக் என பேன் நின்று விடுகிறது. காலை ஆறு மணிக்கு லொட, லொட வென மீண்டும் வருகிறது. இரவு திருடர்கள் போல் இரவு மின்சாரத்தை திருடி விடுகின்றனர்.

இரு ஆண்டுகள் பொறுத்து கொள்ளுங்கள்:
தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், என ராஜ்நாத் சிங்கிடம் கேட்டேன், அதற்கு அவர் உறுதியளித்துள்ளார். முதலில் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். விஜயகாந்த் முதல்வராவது இரண்டாம் பட்சம் தான், மக்களே நமது கூட்டணியில் உள்ள பி.ஜே.பி., தாமரை சின்னம், பாட்டாளி மக்கள் கட்சி, மாம்பழம் சின்னம், அண்ணன் வைகோவின் பம்பரம் சின்னம்,கொங்கு நாடு, ஐ.ஜே.கே., கட்சி இணைந்த ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டு போடுங்கள். இங்கு ஜோயலுக்கு பம்பரம் சின்னத்தில் ஓட்டு போடுங்கள், என அவர் பேசினார்.

கூத்தோ .. கூத்து...:* பிரசாரத்திற்கு மாலை 5.30 க்கு துவங்கிய 5.55 மணிவரை பிரசாரம் செய்தார்.
* விஜயகாந்த் வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே தொண்டர்கள் பட்டாசு வெடித்து வந்துவிட்டார், என தெரிவித்து கூட்டத்தை கூட்டினர்.
*பிரசாரம் துவக்கும் போது கூட்டத்தில் கொடி வைத்திருந்தவர்களை கீழே இறக்க சொன்னவர், ஒரு கட்டத்தில் "ஏய்' கொடியை இறக்க மாட்டியா , கொடியை படுக்க வை, என, கோபமடைந்தார்.
* பிரசாரத்தில் முன்னால் இருந்தவர் கசகச வென சத்தமிட்டதால் நான் அமைதியாகும் வரை பேச மாட்டேன், என பிரசார வேனுக்குள் சென்றுவிட்டார். பின் கூட்டத்தினர் கூச்சலிட்டதால், வெளியில் வந்த விஜயகாந்த் வாயில் விரல் வைத்து அமைதியாக இருக்கும்படி சை காட்டினார். இரு நிமிடங்களுக்குப்பின் மீண்டும், பேச்சை துவக்கினார்.
* கூட்டணி கட்சிகளை குறிப்பிடும் போது பா.ஜ.,கட்சிக்கு பின் பாட்டாளி மக்கள் கட்சியை குறிப்பிட்டார். அண்ணன் வைகோ, என ம.தி.மு.க., வை குறிப்பிட்டார்.
* பிரசாரம் முடியும் போது வேட்பாளர் ஜோயலை அழைத்து மக்கள் முன் கும்பிடவும், சுற்றி, சுற்றி கும்பிடும் படி கேட்டுக் கொண்டார்.

Comments