குஜராத்தில் வளர்ச்சி பணிகள் இல்லை ; கெஜ்ரிவால் பார்க்க போகிறாராம் !

கான்பூர்: குஜராத்தில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்கவில்லை என்றும், மீடியாக்கள்தான் பெரிதுப்படுத்துகின்றன என்றும் கூறி உள்ள கெஜ்ரிவால், அங்கு என்ன பணிகள் நடக்கின்றன என்பதை நான் நேரில் பார்க்க போகிறேன் என்றும் கூறி உள்ளார். உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் ஆம்ஆத்மி கட்சி சார்பில் நடந்த பேரணி பொதுக்கூட்டத்தில் டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


இந்த கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: உத்தரபிரதேசத்தில் மோடி அலை வீசவில்லை. இங்கு வேறு அலைதான் வீசுகிறது. நாங்கள் டில்லியில் 28 இடங்களில் வெற்றி பெற்றோம். அதற்கு, மக்களிடம் இருந்த, காங்கிரஸ் மீதான கோபமே காரணம். தற்போது நாடு முழுவதும் மக்களிடம் கோப அலையே வீசுகிறது. அதன் காரணமாகவே, மக்கள் தெருவில் இறங்கி போராட துவங்கிவிட்டனர்.

நாட்டில் உள்ள அனைத்து எரிவாயு வளங்களையும், முகேஷ் அம்பானிக்கு பா.ஜ., விற்று விட்டது. அதையே காங்கிரசும் பின்பற்றி வருகிறது. தேர்தல் செலவுக்கு அம்பானியிடம் இருந்து காங்கிரஸ் கட்சி பணம் வாங்கி உள்ளது. எரிவாயு மோசடி குறித்து மோடிக்கு கடிதம் எழுதினேன். இதுவரை பதில் இல்லை. ராகுலும், மோடியும் அம்பாயின் ஏஜன்ட்டுகள். வரும் லோக்சபா தேர்தலில் நாங்கள் 100 இடங்களில் வெற்றி பெறுவோம்.

ஊழலற்ற இந்தியா: இந்தியா சுதந்திரம் அடைந்த காலம் முதல் எங்களின் 48 நாட்கள் ஆட்சியைபோல யராவது நடத்தியிருக்கிறார்களா? சொல்ல முடியுமா ? நான் எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்கவில்லை. இந்த நாட்டை காப்பாற்றுங்கள் என கேட்கத்தான் வந்துள்ளேன். ஊழலற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று ஆம்ஆத்மி விரும்புகிறது.

இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.

Comments