
நியூயார்க்: இந்தியாவைச் சேர்ந்த இந்திரா நூயிக்கு, சென்ற 2013ம் ஆண்டில்,
பெப்சிகோ நிறுவனம், 113 கோடி ரூபாயை (1.86 கோடி டாலர்) ஊதியமாக
வழங்கியுள்ளது. இது, இதற்கு முந்தைய 2012ம் ஆண்டில், 1.74 கோடி டாலராகவும்,
2011ம் ஆண்டில், 1.66 கோடி டாலராகவும் இருந்தது. ஆக, மதிப்பீட்டு ஆண்டில்,
இந்திரா நூயி ஊதியம், 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
வழங்கப்பட்ட மொத்த
ஊதியத்தில், அடிப்படை சம்பளம், 16 லட்சம் டாலராகவும், செயல்பாட்டு
ஊக்கத்தொகை, 40 லட்சம் டாலராகவும், பங்கு சார்ந்த வருவாய், 78 லட்சம்
டாலராகவும், இதர இனங்கள் வாயிலான வருவாய், 52 லட்சம் டாலராகவும் உள்ளன. இது
தவிர, 1,02,772 டாலர் மதிப்பிற்கு, வான்வழி போக்குவரத்து சேவையும், 30,463
டாலர் மதிப்பிற்கு தரைவழி போக்குவரத்து சேவையும் இந்திரா நூயிக்கு
வழங்கப்பட்டுள்ளது. கடந்த, 2006ம் ஆண்டு முதல், பெப்சிகோ நிறுவனத்தின்
தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திரா நூயி இருந்து வருகிறார். இவரது சீரிய
தலைமையின் கீழ், நிறுவனம் சர்வதேச அளவில் சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது
என, பெப்சிகோ தெரிவித்துள்ளது.
Comments