ராஜிவ் கொலை வழக்கு: பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உட்பட 7 பேர் விடுதலை- தமிழக அரசு முடிவு!!

ராஜிவ் கொலை வழக்கு: பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உட்பட 7 பேர் விடுதலை- தமிழக அரசு முடிவு!!சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு ரத்து செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை உடனே விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதே வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உட்பட மேலும் 4 பேரையும் உடனே விடுதலை செய்யவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் நேற்று ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றியது. அத்துடன் 23 ஆண்டுகாலம் சிறையில் இருந்ததால் அவர்கள் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி மாநில அரசுக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் தூக்கு ரத்து செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரையும் உடனே விடுதலை செய்ய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. அதேபோல் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை விடுதலை செய்யவும் முடிவு எடுத்துள்ளது. மேலும் ராஜிவ் வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்யவும் அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. இந்த முடிவு குறித்து மத்திய அரசுக்கு தெரியப்படுத்துவோம். மத்திய அரசு 3 நாட்களுக்குள் பதில் தெரிவிக்காவிட்டால் மாநில அரசு அனைவரையும் விடுதலை செய்யும் என்றார். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் உட்பட 7 பேரையுமே தமிழக அரசு விடுதலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments