லோக்சபா தேர்தலில் ஊழல் லாலுவுடன் காங்கிரஸ் கூட்டணி கை கோர்த்தது

புதுடில்லி: வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற லாலு தலைமையிலான ராஷ்ட்டிரிய ஜனதாதளம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் செய்யவுள்ளது. இதற்கான அனைத்து சுற்று பேச்சுக்களும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளி வரும் என தெரிகிறது.

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மாநில வாரியாக கூட்டணி அமைப்பது குறித்த பேச்சுக்களை அரசியல் கட்சிகள் துவக்கியிருக்கின்றன. தமிழகம், உ .பி., மேற்கு வங்கம், ராஜஸ்தான், உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்கிரசுடன் யாரும் கூட்டணிக்கு வராத நிலையே இருந்து வருகிறது.

முதல் கட்டமாக பீகாரில் காங்கிரசுடன் லாலு கட்சியுடன் இணைய திட்டமிட்டுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் ராகுல் சூறாவளி பிரசாரம் செய்தும் கூட்டணி இல்லாததால் பெரும் தோல்வியை சந்தித்தது. ஐக்கிய ஜனதாதளம் அறுதி பெரும்பான்மையுடன் அங்கு ஆட்சி அமைத்தது.

இந்த தோல்வியை பாடமாக கருத்தில் கொண்டு, லாலு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணியை ஏற்படுத்த பேச்சுக்கள் நடந்தன. இதில் இறுதிக்கட்டமாக ராகுல் , லாலுவை இன்று சந்தித்து பேசினார். கூட்டணி ஏறக்குறைய உறுதியாகி விட்டதாக பாட்னாவட்டாரம் தெரிவிக்கிறது.

லாலு ஊழல் வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்று தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார். கிரிமினல் மற்றும் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் பதவி இழந்ததில் லாலு 2 வது இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுலுக்கு நிகராக மோடி உள்பட யாரும் இல்லை என்று லாலு சமீபத்தில் புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக ஊழல் இந்த நாட்டின் பெரும் பிரச்னையாக உருவெடுத்து வந்த வேளையில் தான் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டது பெரும் வரவேற்பை பெற்றது. ஊழலை ஒழிக்க அரும்பாடு படுவோம் என்ற காங்கிரசின் கோஷம் லாலு கூட்டு மூலம் சற்று பலம் இழக்கிறது என்பதில் ஐயமில்லை.

Comments