தமிழக முதல்வர் ஜெயலலிதா வழக்கை முடிக்க சுப்ரீம் கோர்ட்கெடு: நான்கு மாதங்களில் தீர்வு காண வேண்டும் என கண்டிப்பு
புதுடில்லி: வருமான வரி தாக்கல் செய்யாத வழக்கில், தமிழக முதல்வர்,
ஜெயலலிதா, அவரின் தோழி சசிகலா ஆகியோரை விடுவிக்க, சுப்ரீம் கோர்ட் நேற்று
மறுத்து விட்டது. அவர்கள் மீதான, இந்த வழக்கை விசாரிக்க, விசாரணை
நீதிமன்றத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கிய சுப்ரீம் கோர்ட்,
நான்கு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என, விசாரணை
நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா,
சசிகலா மற்றும் இருவரும் இணைந்து உருவாக்கிய, 'சசி என்டர்பிரைசஸ்'
நிறுவனம், கடந்த, 1991 - 92, 1992 - 93 மற்றும் 1993 - 94ம் ஆண்டுகளில்,
வருமான வரி தாக்கல் செய்யவில்லை. இது குறித்து, மத்திய அரசின்
கட்டுப்பாட்டில் உள்ள, வருமான வரித்துறை, 1996 - 97ல், ஜெயலலிதா, சசிகலா
மற்றும் சசி என்டர்பிரைசஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தது.
மேல் முறையீடு:
அந்த
வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என, இருவரும் தாக்கல் செய்த
மனுக்களை, சென்னை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவை
எதிர்த்து, இருவரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும், 2006ல்
தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் இருவரும், சுப்ரீம்
கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு, நீதிபதி,
கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான, 'டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரிக்கப்பட்டு
வந்தது.
தடை ரத்து:
நேற்று
தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கூறப்பட்டதாவது: வழக்கிலிருந்து,
ஜெயலலிதா, சசிகலா மற்றும் சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்தை விடுவிக்க
முடியாது. விசாரணை நீதிமன்ற விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, ரத்து
செய்யப்படுகிறது. இன்னும், நான்கு மாதங்களுக்குள், இந்த வழக்கை விசாரித்து,
தீர்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில், நீதிபதிகள்
தெரிவித்தனர். இந்த உத்தரவு, முதல்வர், ஜெயலலிதாவுக்கு பின்னடைவாக
கருதப்படுகிறது. இன்னும், மூன்று மாதங்களில், லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள
நிலையில், இந்தத் தீர்ப்பு, ஜெயலலிதாவின், அ.தி.மு.க., கட்சிக்கான ஓட்டைப்
பெறுவதில், பாதிப்பை ஏற்படுத்தலாம் என, கருதப்படுகிறது.
வருமான வரி ஏய்ப்புக்கு 7 ஆண்டு தண்டனை:
இது
குறித்து, வருமான வரி ஏய்ப்பு வழக்குகளில் ஆஜராகும், பிரபல வழக்கறிஞர்கள்
கூறியதாவது: வேண்டுமென்றே, வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாமல், வரி
ஏய்ப்பு செய்தால், சிறை தண்டனை உண்டு. வரி ஏய்ப்பு தொகை, ஒரு லட்சம்
ரூபாய்க்கு குறைவாக இருந்தால், அபராதத்துடன், குறைந்தபட்சம், மூன்று மாதம்,
அதிகபட்சம், மூன்று ஆண்டுகள் வரை, சிறை தண்டனை கிடைக்கும். வரி ஏய்ப்பு
தொகை, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அபராதத்துடன், குறைந்தபட்சம்,
ஆறு மாதம், அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் வரை, கடுங்காவல் சிறை தண்டனை
விதிக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர். இந்த வழக்குகளில், 1991 - 92ம்
ஆண்டில், ஜெயலலிதா, 12 லட்சமும், சசிகலா ஒன்பது லட்சமும், சசி
என்டர்பிரைசஸ் நிறுவனம், 32 லட்சமும் வருமான வரி பாக்கி வைத்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments