பா.ஜ.,வுடன் அணி சேர தே.மு.தி.க., தயார்: ஊழல் எதிர்ப்பு வாசகம் மூலம் சூசகம்

விஜயகாந்தின் தே.மு.தி.க., கட்சியின் மாநாடு, விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில், பிப்., 2ம் தேதி நடக்கிறது. இந்த மாநாட்டில், லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கருத்து கேட்கவுள்ளார்.
மாநாட்டிற்கு, 'ஊழல் ஒழிப்பு மாநாடு' என, பெயரிடப்பட்டு உள்ளது. மேலும், 'ஒன்றுபடுவோம்; ஊழலை ஒழிப்போம்' என்ற வாசகமும், ஒற்றை விரல் லச்சினையும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.


கருத்து கேட்பு:

இதுதொடர்பாக, சென்னை கோயம்பேடு, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் இளைஞர் அணி செயலர், சுதீஷ் கூறியதாவது: அ.தி.மு.க., நல்லாட்சி தரும் என்று கருதியே, அக்கட்சியுடன், சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்தோம். இதற்காக, மாநாடு ஒன்றை நடத்தி, கட்சி தொண்டர்களிடம், விஜயகாந்த் கருத்து கேட்டார். ஆனால், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, அ.தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. மத்தியிலும், மாநிலத்திலும், ஊழல் இல்லாத ஆட்சி வேண்டும் என்பதற்காக, உளுந்தூர்பேட்டையில் நடைபெறவுள்ள, தே.மு.தி.க., மாநாட்டிற்கு, 'ஊழல் ஒழிப்பு மாநாடு' என, பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில், லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் கருத்து கேட்பார்.

வரவேற்பை பெறும்:

படித்தவர்கள் மட்டுமின்றி, படிக்காத இளைஞர்களும், தே.மு.தி.க.,வில் தான் அதிகம் உள்ளனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள, மாநாட்டு லச்சினை இல்லாமல், எந்த இளைஞர்களும், இனி தமிழகத்தில் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு, மாநாட்டு வாசகம் மற்றும் லச்சினை பெரும் வரவேற்பை பெறும். கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்த, குழு நியமித்துள்ளார் விஜயகாந்த். அந்தக் குழுவின் முதல் கூட்டம், வரும், 17ம் தேதி நடக்கிறது. கூட்டணி தொடர்பாக எங்களிடம், தி.மு.க., - காங்., - பா.ஜ., ஆகிய கட்சிகள் பேசி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை குழுவின் அறிக்கை, பிப்ரவரி மாநாட்டிற்கு பின், விஜயகாந்திடம் ஒப்படைக்கப்படும். அதன்பின், அவர் கூட்டணி தொடர்பான, இறுதி முடிவை அறிவிப்பார். 2006 சட்டசபை தேர்தல், 2009 லோக்சபா தேர்தல்களில், நான் போட்டிஇட்டேன். விஜயகாந்த் வாய்ப்பளித்தால், வரும் லோக்சபா தேர்தலிலும் போட்டிஇடுவேன். ஊழலை ஒழிப்பதே எங்கள் கட்சியின் நோக்கம். வரும், 2016ல், முதல்வராக, விஜயகாந்த் பொறுப்பேற்ற பின், ஊழலை ஒழிப்பார். இவ்வாறு, சுதீஷ் கூறினார்.

மாநாட்டிற்கான வாசகம் மற்றும் லச்சினையில், ஊழல் ஒழிப்பு கொள்கையை, தே.மு.தி.க., முன்வைத்துள்ளதால், பா.ஜ.,வுடன் தான், அந்தக் கட்சி கூட்டணி வைக்கும் என்பதை உறுதி செய்வது போல உள்ளது.

இதுகுறித்து, அரசியல் விமர்சகர்கள் சிலர் கூறியதாவது: மத்தியில் ஆட்சியில் உள்ள, காங்., அரசு மீது, பல ஊழல் புகார்கள் உள்ளன. இந்த ஊழல்கள் பற்றி பிரசாரம் செய்தே, டில்லியில், 'ஆம் ஆத்மி' கட்சி ஆட்சியை பிடித்தது. பா.ஜ.,வும், அதன் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும், காங்கிரசுக்கு எதிரான ஊழல் புகார்களை, பொதுக்கூட்டங்களில் எல்லாம், பட்டியலிட்டு வருகின்றனர்.

பல ஊழல்கள்:

முன்னர், காங்., கூட்டணியில் இடம் பெற்றிருந்த தி.மு.க.,வும், ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியது. தமிழகத்திலும், முந்தைய தி.மு.க., ஆட்சியில், பல ஊழல்கள் நடந்ததாக, விஜயகாந்த் ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளார். இப்போது, தே.மு.தி.க., மாநாட்டிற்கு, ஊழல் ஒழிப்பு மாநாடு என, பெயரிடப்பட்டுள்ளது. 'ஒன்றுபடுவோம்; ஊழலை ஒழிப்போம்' என்ற வாசகமும் வெளிஇடப்பட்டுள்ளதை பார்க்கும் போது, தி.மு.க., மற்றும் காங்கிரசுடன், அக்கட்சி கூட்டணி சேர விரும்பவில்லை என்று தெரிகிறது. ஊழல் ஒழிப்பை வலியுறுத்தும், பா.ஜ.,வுடனே கூட்டணி சேரும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Comments