கட்சி கட்டளையிட்டால் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன்: கெஜ்ரிவால்

புதுடில்லி: கட்சி கட்டளையிட்டால் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேட்டியளித்த டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், தான் டில்லி லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன்.
தங்களது கட்சி எம்.எல்.ஏ.,க்களும் லோக்சபா தேர்தலிலும் போட்டியிட மாட்டார்கள். கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன் என கூறியிருந்தார். இதன் பின்னர், எம்.எல்.ஏ.,க்கள் லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என்ற முடிவை கெஜ்ரிவால் மறுபரீசிலனை செய்வார் என தகவல் வெளியாகின.

இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால், தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் சாதாரண மனிதனாகவே இருக்க விரும்புகிறேன். அரசை நடத்துவதென்பது மிகப் பெரிய சவால் என்ற பெரிய பாடத்தை நான் கற்றுள்ளேன். ஆம் ஆத்மி கட்சியை ஏற்க இந்தியா தயாராக உள்ளது. அரசியல் கணக்கு போடும் அளவுக்கு நான் பெரிய மனிதனல்ல. இந்திய பாதுகாப்பாக, செழிப்பாக இருக்க வேண்டு்ம் என்பதே எனது ஆசை. கட்சி கட்டளை இட்டால் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன். ஆம் ஆத்மி கட்சி 400 லோக்சபா தொகுதிகளில் போட்டியிடும். வெற்றி பெறப்போது நாங்கள் அல்ல; மக்கள்தான். அதிருப்தி எம்.எல்.ஏ. பின்னி பேராசைக்காரர்; அவர் எப்போது வேண்டுமானாலும் கட்சியை விட்டு வெளியேறக் கூடும். காங்கிரஸ் எப்போது வேண்டுமானாலும் ஆதரவை விலக்கிக் கொள்ளக் கூடும். நாங்கள் அவர்கள் ஆதரவைக் கேட்டுப் பெறவில்லை; எனவே எங்களுக்கு கவலையில்லை.ஊழல் செய்த காங்கிரஸ் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.


மேலும் அவர், பெண் மானபங்கம் செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் சஸ்பெண்ட் செய்யப்படாவிட்டால் விசாரணை குழு வெறும் கண்துடைப்பாக அமையும். தர்ணா போராட்டம் செய்து கொண்டு அரசை நடத்த முடியும்,தர்ணா போராட்டம் எத்தனை நாள் நடைபெறும் என முடிவு செய்யப்படவில்லை.தவறு செய்யும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் எதிர்பார்த்ததை விட 3 வாரங்களில் சாதித்துள்ளோம். 21நாட்களில் எந்த அரசும் இத்தகைய சாதனையை செய்ததில்லை. பா.ஜ., மற்றும் காங்., கட்சிகள் எங்களுக்கு அரசை வழி நடத்த தெரியவில்லை என கூறுகின்றன. வெளிநாட்டினரை நாங்கள் சிறந்த முறையில் வரவேற்கிறோம். இரவில் அமைச்சர் வீட்டில் தங்க வேண்டும் என டில்லி போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார் என கூறினார்.

Comments