"சிதம்பரத்துக்கு வயதாகி விட்டது' "போட்டு உடைக்கிறார்' நாச்சியப்பன்

காரைக்குடி: ""சிதம்பரத்துக்கு வயதாகி விட்டதால், இளைஞர்களுக்கு வழிவிட சொல்கிறார்,'' என, மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காரைக்குடியில் கூறினார்.

அவர் கூறியதாவது: "இளைஞர்கள் பதவிக்கு வர வேண்டும்' என்பது மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின், நீண்டகால "கனவு திட்டம்'. கடந்த 30 ஆண்டுக்கு முன், இளைஞர்கள் 100 பேருக்கு, ராஜிவ் பதவி கொடுத்தார்.
அவர்கள் இன்று, முக்கிய பதவிகளில் இருக்கின்றனர்; அவர்களில் ஒருவர் தான் சிதம்பரம். இன்று வயதாகி விட்டதால், இளைஞர்களுக்கு வழி விட கூறுகிறார். காங்கிரசை பொறுத்தவரை, மூன்றில் ஒரு பங்கு 35 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கும்; மற்றொரு பங்கு, 55 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும்; மூன்றாம் பங்கு, 55க்கு மேல் உள்ளவர்களுக்கும் பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.

சுதர்சன நாச்சியப்பன், சிதம்பரத்தின் "மாஜி' சிஷ்யர். கடந்த 1984ல், சிவகங்கை லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வென்று, மத்திய இணை அமைச்சரானார், சிதம்பரம். 1989 ல் நடந்த சட்டசபை தேர்தலில், சிவகங்கை தொகுதியில், சுதர்சன நாச்சியப்பனை நிறுத்தினார்; ஆனால், குறைந்த ஓட்டுக்களில் அவர் தோற்றார். பின், 1996 ல், த.மா.கா., துவக்குவதில் சிதம்பரம் முக்கிய பங்கு வகித்தார். ஆனால், சுதர்சன நாச்சியப்பன், காங்., கட்சியில் தொடர்ந்தார். கடந்த 1999 ல், இருவரும் சிவகங்கை லோக்சபா தொகுதியில்
எதிர் துருவங்களாக போட்டியிட்டனர். இதில், சுதர்சன நாச்சியப்பன் வென்றார். அதற்குப் பின், த.மா.கா.,வில் இருந்து பிரிந்து காங்., ஜனநாயகப் பேரவையை, சிதம்பரம் துவக்கினார். 2004 தேர்தலில், திடீரென காங்கிரசில் ஐக்கியமான சிதம்பரம், சிவகங்கை தொகுதியை கைப்பற்றி வென்றார். அன்று முதல், இருவருக்கும் "ஏழாம் பொருத்தம்' தான். அதனுடைய வெளிப்பாடு தான், "சிதம்பரத்துக்கு வயதாகி விட்டது' என, சுதர்சன நாச்சியப்பன் "வெளிப்படை' பேட்டி கொடுப்பதற்கு காரணம் என, கட்சி வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Comments