அந்தமான் அருகே படகு விபத்து பலி எண்ணிக்கை 32-ஆக உயர்வு

போர்ட் பிளேர்: அந்தமான் அருகே படகு கவிழ்ந்த விபத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 8 பேர் உட்பட 32 பேர் பலியானார்கள்.

அந்தமான் அருகே சுற்றுலா பயணிகளைஅழைத்து சென்ற படகு ரோஸ் தீவிலிருந்து அந்தமானின் வடக்குப்பகுதியில் கவிழ்ந்தது. இந்த படகில் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் இருந்துள்ளனர். இந்த படகில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 30 பேரும், மும்பையை சேர்ந்த சிலரும் என 40 முதல் 43 பேர் வரை இருந்துள்ளனர்.
படகு கவிழ்ந்த விபத்தில் 32 பேர் பலியாகியுள்ளனர். இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 8 பேரும் பலியாகினர். 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டுள்ளவர்கள் போர்ட் பிளேரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கு காரணம்: விபத்துக்குள்ளான படகு 25 பேரை மட்டுமே அமரக்கூடிய அளவு வசதி இருந்ததாகவும், கூட்டம் அதிகமாக இருந்ததால் விபத்து ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாக அந்தமான் கவர்னர் கூறியுள்ளார். மேலும் அவர், இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதோடு, பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிவாரணம்வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்து குறித்து மத்திய உள்துறை அமைச்சர்ஷிண்டேவிடம் விவரித்த கவர்னர், மீட்பு பணிகள் குறித்தும் தெரிவித்தார்.

படகு விபத்து குறித்து மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள உதவிமைய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1070,03192-240127, 230278, 230629,238881,9933274092 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அதிர்ச்சி: படகு விபத்து குறித்து பிரதமர் மன்மோகன் சிங் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் மீட்பு பணிகளில் உதவுமாறு அதிகரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் இரங்கல்: படகு விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒருலட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும், காயமடைந்தவர்களை அரசின் செலவில் சென்னை அழைத்து வர ஏற்பாடு செய்யப்படும் எனவும் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Comments