1,000 டீக்கடைக்காரர்களை சந்திக்கிறார் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி

ஆமதாபாத்:பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, நாடு முழுவதும், 300 நகரங்களில், 1,000 டீக்கடைக்காரர்களை சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.

'டீக்கடை நடத்தியவர், பிரதமர் பதவிக்கு ஆசைப்படக் கூடாது' என, சமாஜ்வாதி கட்சியின், முன்னணி தலைவர்களில் ஒருவரான, நரேஷ் அகர்வால், சில வாரங்களுக்கு முன் பேசினார்.
அது போல், கடந்த வாரம், டில்லியில் நடந்த, காங்., தேசிய செயற்குழு கூட்டத்தில், தமிழகத்தை சேர்ந்த, எம்.பி., மணிசங்கர் அய்யர், 'மோடியால் பிரதமராக முடியாது; காங்கிரஸ் கூட்டங்களில், அவர், டீ விற்கத் தான் முடியும்' என, பேசினார்.

இதனால் கொதித்தெழுந்துள்ள, பா.ஜ.,வினர், நாடு முழுவதும், 'நமோ' டீக்கடை என்ற பெயரில், டீக்கடைகளை திறந்து வருகின்றனர். மேலும், காங்கிரஸ் அலுவலகங்கள் அருகே, டீ விற்று, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக, அடுத்த மாதம், 1ம் தேதி முதல், நாடு முழுவதும், 300 நகரங்களில், 1,000 டீக்கடைக்காரர்களிடம், மோடி பேச உள்ளார். இணையதளம் அல்லது வீடியோ கான்பரன்சிங் மூலம், அவர், டீக்கடைக்காரர்களை சந்திக்க உள்ளார்.இதற்கான ஏற்பாடுகளை, கட்சியின் முன்னணித் தலைவர்கள், மேற்கொண்டு வருகின்றனர்.

Comments