கனிமொழி, எம்.பி., பதவியை ராஜினாமா செய்வாரா? : கேட்கிறார் இளங்கோவன்

பொதுக்குழு கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, "லோக்சபா தேர்தலில் தனித்து நிற்க வேண்டிய சூழல் வந்தாலும், காங்கிரசுடன் கூட்டணி இல்லை' என, கூறியிருக்கிறார். அப்படி முடிவெடுத்தவர், மகளுக்காக கெஞ்சி வாங்கிய ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய சொல்வாரா?,'' என, முன்னாள் காங்., மத்திய அமைச்சர் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நடந்த, தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், "வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., காங்., உடன் கூட்டணி இல்லை என்றும், தனித்து நிற்க வேண்டிய சூழலிலும் காங்கிரசுடன் கூட்டணி கிடையாது' என, கருணாநிதி தெரிவித்து உள்ளார்.


இதுகுறித்து, இளங்கோவன் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்ற கருணாநிதியின் அறிவிப்பு, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை உள்ளிட்ட முப்பெரும் விழாவுக்கு, காங்கிரசாருக்கு வழங்கிய பரிசாக எடுத்துக் கொள்கிறோம். தமிழக காங்கிரசார் பல ஆண்டுகளுக்கு பின், மகிழ்ச்சியாக உள்ளனர். தி.மு.க., தலைவர், கடந்த காலங்களிலும் காங்., மீது பழிச்சொல் சொல்லி வந்தவர் தான். ஆனால், காரியம் ஆகவேண்டும் எனில், எந்த அளவுக்கும் இறங்கக் கூடியவர். கடந்த ஓராண்டாக காங்கிரசை குறை கூறியவர், ராஜ்யசபா 'சீட்' வாங்கிட, 2 மாதங்களுக்கு முன், டில்லிக்கு சென்று, கட்சித் தலைமையிடம் கெஞ்சினார். இன்று காங்., கட்சியுடன் கூட்டணி இல்லை, என்று சொல்லும் கருணாநிதி, காங்., கட்சி வழங்கிய, அவரது மகள் கனிமொழியின் ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய சொல்வாரா?.

இலங்கை தமிழர் பிரச்னையில் தமிழர்களுக்கு, மத்தியில் ஆளும் காங்., கட்சி, அனைத்து உதவிகளையும் செய்துள்ளன. 5 மாநில தேர்தலில், காங்., கட்சி தோல்வி குறித்து, ஜெயந்தி நடராஜன் கூறிய கருத்து, அவரது சொந்த கருத்தாகும். அதுகுறித்து நான் பதில் கூற முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்.

Comments