"பிரச்னையை மீனவர்கள் பேசித் தீர்க்க வேண்டும்' : இந்திய கடலோர காவல்படை அறிவுரை

மண்டபம்: ""கடலில் எல்லை தாண்டும் பிரச்னையை, இந்திய - இலங்கை மீனவர்கள் பேசித் தீர்க்க வேண்டும்,'' என, இந்திய கடலோர காவல்படை வைஸ் அட்மிரல் அனுராக் ஜி தப்பிலியால் கூறினார்.

ராமநாதபுரம் மண்டபத்தில், இந்திய கடலோர காவல்படை அலுவலக புது கட்டடத்தை, திறந்து வைத்த அவர் கூறியதாவது: 1.98 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இக்கட்டடத்தில், நவீன தொலைத்தொடர்பு வசதிகள் உள்ளன.
லண்டன் தயாரிப்பான, "ஹோவர் கிராப்ட்' ரோந்துக் கப்பல்களில் ஆறு, இந்திய கடலோர காவல்படைக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், இரண்டு கப்பல்கள், டிச.,23ல், மும்பையில் வழங்கப்பட உள்ளன. கடல்வழி கண்காணிப்பு எங்கு அவசியம் உள்ளதோ, அங்கு இவை ஈடுபடுத்தப்படும்.

இந்திய, இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினால் தான், சுமுக முடிவு எட்டப்படும். வெளியுறவுத்துறை அமைச்சர், மீன்துறையினர் முயற்சித்தால், மீனவர் பிரச்னை தீர வாய்ப்பு உள்ளது. நம் மீனவர்கள் எல்லை தாண்டுவது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.

Comments