சஞ்சய் தத்துக்கு மீண்டும் 'பரோல்'

மும்பை: மும்பை, தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், தண்டனை பெற்ற, பாலிவுட் நடிகர், சஞ்சய் தத், ஒரு மாதம், பரோலில் வெளிவந்துள்ளார்.
மும்பையில், 1993ல் நடந்த, தொடர் குண்டு வெடிப்பில், 257 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்காக, பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகளால் கொண்டு வரப்பட்ட ஆயுதங்களில், 9 எம்.எம்., ரக துப்பாக்கி ஒன்றையும், ஏ.கே., 56 ரக துப்பாக்கியையும் சஞ்சய் தத் சட்டவிரோதமாக வாங்கிய வழக்கில், மும்பை, தடா நீதிமன்றம், அவருக்கு, 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
அவர் ஏற்கனவே, 18 மாதம் சிறையில் இருந்துள்ளார். 42 மாதம் சிறை தண்டனையை அனுபவிப்பதற்காக, புனே எரவாடா சிறையில், மே மாதம் அடைக்கப்பட்டார். கடந்த அக்., 1ல், மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டி விண்ணப்பித்தார். 2 வார விடுமுறையில் செல்ல, சிறை நிர்வாகம் அனுமதியளித்தது. மேலும், 2 வாரங்களுக்கு விடுமுறை நீடிக்கப்பட்டது. அக்., 30ல் மீண்டும் சிறைக்கு திரும்பினார். இந்நிலையில், தன் மனைவி மான்யதா, உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, பரோலில் செல்ல அனுமதி கோரினார். அவர் விண்ணப்பத்தை ஏற்று, ஒரு மாதம் பரோலில் செல்வதற்கு, புனே மண்டல கமிஷனர் அனுமதியளித்தார். இதையடுத்து, சஞ்சய் தத், புனேயில் உள்ள எரவாடா சிறையிலிருந்து, நேற்று வெளிவந்தார். மனைவி மான்யதாவுக்கு, கல்லீரலில் கட்டி உள்ளதாக, சஞ்சய் தத், பரோல் விண்ணப்பத்தில், குறிப்பிட்டிருந்தார். ஆனால், மான்யதா இரண்டு விழாக்களில் உற்சாகமாக கலந்து கொண்டதாகவும், ஒரு விழாவில், நடனமாடியதாகவும், சில பத்திரிகைகள் படம் வெளியிட்டிருந்தன. இதனால், சர்ச்சை கிளம்பியது.

Comments