பெண்களின் பாதுகாப்பிற்காக மொபைலில் 'அலாரம் பட்டன்' அறிமுகம்

புதுடில்லி : கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டில்லியில் மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டையை உலுக்கியது. இதனையடுத்து நாட்டில் பெண்களில் பாதுகாப்பை பலப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது, மொபைல் போன்களில் அலாரம் பட்டனை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்தகைய வசதி கொண்ட மொபைல் போன்களை பயன்படுத்தும் பெண்கள், அவசர காலத்தில் இந்த பட்டனை அழுத்தி தங்களை காத்துக் கொள்ளலாம். அலாரம் பொருத்தப்பட்ட மொபைல்கள் தற்போது ஜெய்பூரில் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



அரசு நடவடிக்கை:

சமீபத்தில் ஐடி துறை சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தின் போது, இந்த புதிய அலாரம் முறையை அறிமுகம் செய்யும் முடிவை மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்திடம் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். பெண்களின் பாதுகாப்பிற்காக இந்த புதிய முறையை கொண்டு வரவும் அவர்கள் யோசனை தெரிவித்தனர். இது தொடர்பாக ஐடி அமைச்சக மூத்த அதிகாரிகள் கூறுகையில், தற்போது சோதனை முறையாக இத்தகைய வசதி கொண்ட மொபைல்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது; இது குறித்த விபரங்களை விரைவில் அமைச்சர் முறையாக அறிவிப்பார் என கூறி உள்ளார். ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் பெண்கள், இத்தகைய வசதியை டவுன்லோட் செய்து கொள்ளலாம் எனவும், புதிய மாடல் மொபைல்களில் இந்த புதிய அலாரம் பட்டன் பொருத்தப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய வசதிக்கான பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து பாதுகாப்பு :

பெண்கள் பாதுகாப்பிற்கான அலாரம் பட்டனுடனான மொபைலை அறிமுகப்படுத்துடன், சாலை விபத்துக்களை தடுக்கும் புதிய முறைக்கும் மத்திய நிதித்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. வாகனங்களில் ஜிபிஎஸ் அடிப்படையிலான கருவிகள் பொருத்த வேண்டும் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. பயணிகள் வசதிக்காக பஸ்கள், ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகளிலும் இந்த அலாரம் பட்டனை பொருத்த வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. அவசர காலங்களின் போது பயணிகள் இந்த பட்டனை அழுத்தினால் அதன் சிக்னல் உள்ளூர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு செல்லுமாறு இணைக்க வேண்டும் எனவும் போக்குவரத்து துறையின் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிசிடிவி கேமிராக்கள் :

ரூ.1700 கோடி செலவில் பஸ்களில் சிசிடிவி கேமிரா பொருத்தும் பணிகளுக்கும், நகர எல்லைப் பகுதிகளையும் காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கும் விதமாக ஆர்டிவி.,க்களை பொத்தவும் மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. போக்குவரத்து கழக வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்தி அதனை காவல்துறை கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்க முதல்கட்டமாக திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் வாகனங்கள் செல்லும் பாதையை கண்காணிப்பதுடன் அவைகள் வழக்கமான பாதையில் இருந்து மாறி செல்லும் போது எச்சரிக்கை விடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிசிடிவி கேமிராக்களையும் காவல்துறை கட்டுப்பாட்டு அறையுடன் பொருத்தி, போக்குவரத்தை கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இந்த திட்டத்தை முறையாக சீரமைத்து நடத்தும் பொருப்பை டெண்டர் மூலம் நிறுவனங்களிடம் ஒப்படைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
போதையில் விபத்து :


சாலை விபத்துக்கள் நடைபெறுவதற்கு கூறப்படும் முக்கிய காரணங்களில் ஒன்று போதையில் வாகனம் ஓட்டுவது. போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க அமெரிக்கா புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்க நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த முறை குறித்த அதன் தலைவர் டேவிட் எல்.ஸ்டிக்லாந்து கூறுகையில், இந்த புதிய தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட வாகனங்களில் டிரைவர் மது அருந்தி இருந்தால், வாகனம் இயங்காது; ஆல்கஹால் உட்கொண்டவர் ஸ்டேரிங்கை தொட்டாலோ அல்லது வாகனத்தில் அமர்ந்து சுவாசித்தாலோ வாகனம் இயக்க முடியாது. இந்த புதிய தொழில்நுட்ப முறையை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன; இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் வாகன விபத்துக்கள் குறைக்கப்பட்டுள்ளது; 2011ல் 10,553 ஆக இருந்த சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 2012ல் 7835 ஆக குறைந்துள்ளது; ஆனால் அமெரிக்காவில் போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள் 4.6 சதவீதம் அதிகரித்துள்ளது; 2011ல் 9865 ஆக இருந்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2012ல் 10,322 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு டேவிட் தெரிவித்துள்ளார்.

Comments