ஆட்சி அமைக்க 10 நாள் அவகாசம்'- கெஜ்ரிவால் : எங்களின் நற்பெயரை கெடுக்க காங்கிரஸ் மற்றும் பா.ஜ., முயற்சிக்கிறது என்றும், டில்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக எங்களின் நிபந்தனைகளை ஏற்றால் அவர்கள் தரும் ஆதரவை ஏற்று கொள்ள தயாராக இருப்பதாவும் ஆம்ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் துணைநிலை ஆளுநரை சந்தித்த பின்னர் நிருபர்களிடம் கூறினார்.
அரவிந்த் கெஜ்ரிவால் மேலும் கூறுகையில்: காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு
அளிப்பது என கூறியிருப்பது எனக்கு ஆச்சரியமளிக்கிறது. எங்களுக்கு
காங்கிரஸ் அளிக்கும் ஆதரவின் நோக்கம் என்ன என்பதை அறிய விரும்புகிறேன். இது
போல் ஜன்லோக்பால் நிறைவேற்ற ஆதரவு அளிப்பார்களா ? பா.ஜ.,வுக்கு மெஜாரிட்டி
உள்ளது. இந்த கட்சிக்கு இன்னும் 4 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவே வேண்டும். இது
எளிதானது. ஆனால் பா.ஜ., ஆட்சி அமைக்க மறுத்து வருகிறது.
காங்கிரசும், பா.ஜ.,வும் ஜன்லோக்பால் மற்றும் ஆம்ஆத்மியின் தேர்தல்
வாக்குறுதிகள் குறித்து தங்களின் நிலையை தெளிவாக அறிவிக்க வேண்டும். இது
தொடர்பாக சோனியா, ராஜ்நாத்சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளேன். எங்களின்
நிபந்தனைகளை ஏற்று கொண்டால் அவர்களின் ஆதரவை நாங்கள் ஏற்க தயார். நாங்கள்
யாருடைய ஆதரவையும் எதிர்பார்க்கவில்லை. இரு கட்சிகள் சேர்ந்து எங்களின்
நற்பெயரை கெடுக்க முயற்சிக்கின்றனர். எங்களுக்கு பதவி வெறி இல்லை.
மின்சார
விநியோகத்தில் முறைகேடு நடந்ததை காங்கிரஸ் ஒப்பு கொள்ளுமா ? தண்ணீர்
மாபியா கும்பல் பின்னணியில் காங்கிரசும், பா.ஜ.,வும் இருப்பதை ஒப்பு
கொள்ளுவார்களா? சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு டில்லியில்
நடைமுறைப்படுத்தாது என்பதை காங்கிரஸ் உறுதி அளிக்குமா ? டில்லி மாநகராட்சி
நிர்வாகத்தில் காங்., பா.ஜ., தலையீடு இல்லாமல் இருக்க முடியுமா?
ஜன்லோக்பால் மசோதாவை காங்கிரஸ் நிறைவேற்றுமா? நாட்டில் நடந்த அனைத்து
ஊழல்களுக்கும், காங்கிரசும், பா.ஜ.,வும் தான் பொறுப்பு. கால தாமதமின்றி
லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். லோக்பால் மசோதா
நிறைவேற்றப்பட்டவுடன் காங்கிரஸ் மற்றும் பா.ஜ., பிரமுகர்கள் மீதான ஊழல்
புகார் குறித்து விசாரிப்போம் . இதற்கு இரு கட்சிகளும் தயாரா ? டில்லியில்
விஐபி கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் , டில்லியி்ல் எம்.எல்.ஏ.,
எம்.பி., என யாருக்கும் தனிப்பட்ட சலுகை அளிக்கக் கூடாது
இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.
யாருக்கும் அறுதிபெரும்பான்மை கிடைக்காததால் டில்லியில் ஆட்சி அமைப்பதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது. இதற்கிடையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக காங்., தெரிவித்துள்ளது. இந்த ஆதரவை ஆம்ஆத்மி ஏற்க தயாராக இல்லை. இந்நிலையில் இந்த கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் துணைநிலை ஆளுநரை சந்தித்து தனது கட்சியின் நிலைப்பாட்டை தெரிவித்தார். இவர் ஆட்சி அமைப்பது தொடர்பாக காங்., பா.ஜ., கட்சிகளுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும், 10 நாள் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., 32 தொகுதிகளையும்,
ஆம்ஆத்மி கட்சி 28 இடங்களையும், காங்கிரஸ் 8 இடங்களையும் பிடித்துள்ளது.
ஆட்சி அமைக்க 36 எம்.எல்.ஏ.,க்கள் தேவை. ஆனால் யாருக்கும் பெரும்பான்மை
இல்லை. இருப்பினும் பா.ஜ.,வும், ஆம்ஆத்மியும் நாங்கள் ஆட்சி அமைக்க
மாட்டோம் என திரும்ப, திரும்ப கூறி வருகின்றனர்.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் துணைநிலை ஆளுநரை சந்திப்பது முக்கியத்தும்
பெறுகிறது. இவருடன் மணீஷ் சிசோடியா மற்றும் மூத்த நிர்வாகிகள் உடன்
சென்றனர்.
இந்த சந்திப்பின்போது காங்., ஆதரவை நிராகரித்ததுடன், ஆட்சி அமைக்க 10 நாள்
அவகாசம் கேட்டார். மக்கள் மீது சுமையை நிர்பந்திக்க கூடாது எனவே ஆம்ஆத்மி
கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாக காங்., நிர்வாகிகள்
தெரிவித்தனர்.
நிதின்கட்காரி தாக்கு: ஆம் ஆத்மி கட்சிக்கு எவ்வித அனுபவமும்,
திறமையும் கிடையாது. மேலும் இந்த கட்சி கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும்
போலியானவை இதனை இந்த கட்சியால் நிறைவேற்ற முடியாது. எனவே தான் ஆட்சி அமைக்க
தயங்குகிறது என டில்லி பா.ஜ., பொறுப்பாளர் நிதின்கட்காரி நிருபர்களிடம்
கூறினார்.
ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு: இந்த குழப்பமான
சூழ்நிலையில் ஒரு இடங்களை கைப்பற்றிய ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி
கட்சிக்கு ஆதரவு அளிக்க தயாராக உள்ளது அறிவித்துள்ளது. இது தொடர்பான ஆதரவு
கடிதத்தை துணைநிலை ஆளுனரிடம் ஒப்படைக்கவும் அக்கட்சி முடிவு செய்துள்ளது.
Comments