புதுடில்லி: டீசல், காஸ், கெரசின் ஆகியவற்றுக்கு அளிக்கப்படும்
மானியத்தால், அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதிச் சுமையைக் குறைக்க, பல்வேறு
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மானியத்தைக் குறைப்பது தொடர்பாக,
அரசுக்கு ஆலோசனை வழங்க, வல்லுனர் குழு அமைக்கப்பட்டது.
இக்குழு
அரசுக்கு அளித்துள்ள பரிந்துரையில், "டீசல் விலையை, லிட்டருக்கு, 5
ரூபாயும், கெரசின் விலையை, லிட்டருக்கு, 4 ரூபாயும், காஸ் விலையை சிலிண்டர்
ஒன்றுக்கு, 250 ரூபாயும் உயர்த்த வேண்டும்' என, குறிப்பிட்டு இருந்தது.
இது
குறித்து, நேற்று நிருபர்களிடம் பேசிய, அமைச்சர் வீரப்ப மொய்லி
கூறியதாவது: பொருளாதார ரீதியாக, இது சரியான நடவடிக்கை. ஆனால், நடைமுறைக்கு
சாத்தியமில்லை. அரசின் நிதி நிலை மோசமாக உள்ள தருணத்தில், வல்லுனர்
குழுவின் முடிவு சிறந்தது தான். நாடு வளர்ச்சி பாதையில், முன்னோக்கி செல்ல
வேண்டுமென்றால், சீர்திருத்தங்கள் அவசியம் தேவை. ஆனால், இதை எப்படி
அமல்படுத்துவது என்று கேள்வி எழுகிறது. பொதுமக்களின் நலன் மற்றும் அரசின்
வருவாய் என, சீர்தூக்கி பார்க்க வேண்டியுள்ளது. இரண்டையும் பாதிக்காத
வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது, டீசல் விலை மாதந்தோறும்,
லிட்டருக்கு, 50 காசுகள் என்ற வீதத்தில் உயர்த்தப்படுவது தொடரும், என்றார்.
Comments