காஷ்மீரின் உண்மை வரலாறு

"பூலோக சொர்க்கம்' காஷ்மீர், இந்தியாவின் வட எல்லையாக உள்ளது. காஷ்மீரின் பெரும் பகுதியை, பாகிஸ்தான் ஆக்ரமித்து கொண்டது மட்டுமன்றி, சொந்தம் கொண்டாடி வருகிறது. காஷ்மீர் யாருக்கு சொந்தம்? இந்தியாவுக்கா.. பாகிஸ்தானுக்கா.. அல்லது தனி நாடாக இருக்க வேண்டுமா.. இன்றும் அணையாமல் பற்றி எறிந்து கொண்டிருக்கும் இப்பிரச்னையின் ஆரம்பம் இது தான்.
காஷ்மீர் பிறந்த கதை:


வேத காலத்தில் அங்கு வாழ்ந்த காஷ்யப் முனிவரின் பெயரிலிருந்து தான், காஷ்மீர் என்ற பெயர் வந்தது. காஷ்யப் முனிவரின் கடும் தவத்தால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் "சட்டிஸர்' என்ற பெரிய ஏரியின் நீர் ஒன்றிணைந்து பெரும் நதி உருவாகி, அப்பகுதியை செழிப்படைய செய்தது. அவரின் தவத்தின் பயனாக, சிவபெருமான் தோன்றி, அப்பகுதிக்கு ஆசி வழங்கியதாகவும், அவர் தோன்றிய இடமே அமர்நாத் என்பதும் ஐதீகம். இது ஸ்ரீநகரிலிருந்து 145 கி.மீ., தொலைவில் உள்ளது. அமர்நாத்தில் தோன்றும் சிவலிங்கத்தைக் காண, இன்றும் லட்சக்கணக்கான மக்கள் பயணிப்பது வாடிக்கை.
காஷ்மீரின் ஆட்சியாளர்கள்:

காஷ்யப்பின் மகன் நீல் என்பவரே காஷ்மீரை முதலில் ஆட்சி செய்தவர். கி.மு.,322 முதல் கி.மு.,185 வரையிலான காலகட்டத்தில் மவுரிய பேரரசும், கி.பி.100ல் குஷான் பேரரசும் காஷ்மீரை ஆட்சி செய்தன. கி.பி., 1200ம் காலகட்டத்தில் தான், காஷ்மீர் மண்ணில் இஸ்லாமியர்கள் காலூன்றினர். கி.பி., 1327ல் காஷ்மீரை ஆட்சி செய்த இந்து மன்னர் ரிச்சன் ஷா என்பவர், மத்திய ஆசியாவை சேர்ந்த, அப்துர் ரஹ்மான் புல்புல் என்பவரால் மதம் மாற்றப்பட்டார். உதைனா தேவா தான் காஷ்மீரை ஆட்சி செய்த கடைசி இந்து மன்னர். 1346ல் உதைனா தேவாவிடம் இருந்து, சம்சுதீன் லுடுட்மஸ் எனும் துருக்கி சுல்தான், ஆட்சியை கைப்பற்றினார். அடுத்த 4 நூற்றாண்டுகள், ஆப்கன் நாட்டினரின் கட்டுப்பாட்டில் காஷ்மீர் இருந்தது. 1586ல் முகலாயப் பேரரசர் அக்பரின் ஆட்சியின் கீழ் வந்தது. பின், முகலாயர்களை வீழ்த்திய துரானி பேரரசு, காஷ்மீரில் ஆட்சி அமைத்தது. அகமது ஷா துரானி 1757 முதல் 1819 வரை காஷ்மீரின் மன்னராக இருந்தார். 1819ல் துரானியர்களை வீழ்த்திய ரஞ்சித் சிங், சீக்கிய ஆட்சியின் கீழ் காஷ்மீரை கொண்டு வந்தார். 1846ல் ஆங்கில அரசு, சீக்கியர்களை வீழ்த்தி, காஷ்மீரை கைபற்றியது.
காஷ்மீர் பிரச்சனை:

1947ல் காஷ்மீரை இந்தியா உடன் இணைப்பதா, பாகிஸ்தானுடன் இணைப்பதா அல்லது தனி நாடாக செயல்படுவதா என்ற குழப்பம் நிலவியது. அப்போது, காஷ்மீரின் மன்னராக இருந்த ஹரி சிங், இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்து, ஷேக் அப்துல்லாவை பிரதமராக நியமித்தார். அப்போதைய நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, அரசியல் சட்டப்பிரிவு 370, காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக இச்சட்டப்பிரிவு, இங்கு நீக்கப்படாமல் அமலில் உள்ளது. இச்சட்டப் பிரிவின்படி, இந்தியாவில் பிற பகுதிகளில் வசிப்பவர்கள், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சொத்துக்களை வாங்கவோ, குடியேறவோ முடியாது.
காஷ்மீர் - மத அரசியலின் கூடாரம்:

ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை உள்ளடக்கியதே ஜம்மு காஷ்மீர். காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள், சுயநலனுக்காக காஷ்மீரை பிரிக்க போராடுகின்றனர். அவ்வாறு பிரிந்தால், பாகிஸ்தானுடன் இணைய முனைப்பு காட்டுவர். சிறுநிலப் பகுதியான காஷ்மீரில் போதிய வளங்கள் இல்லை; இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். இந்தியாவில் மகிழ்ச்சியாக வாழ்வதாக இவர்கள் கூறுகின்றனர். ஆனால், காஷமீர் பகுதி மக்கள் துன்பத்தில் தவிப்பதாக பிரிவினைவாதிகள் மட்டுமே கூறுகின்றனர். பாகிஸ்தானால் அபகரிக்கப்பட்ட காஷ்மீரில், காஷ்மீரி மொழி பேசப்படுவதில்லை. இவர்கள் காஷ்மீர் மக்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள். இது தான் காஷ்மீரின் உண்மையான வரலாறும் நிலைமையும்.

Comments